ரமலான் நோன்பு பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "எவர் ரமழான் மாதத்தில் ஈமானுடனும் நன்மையை நாடியும் நின்று வணங்குகிறாரோ அவரது முன் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும்" (ஸஹீஹஹுல் புகாரி)
webdunia photo
WD
நபி (ஸல்) அவர்கள் ரமழானில் மற்ற காலங்களை விட மிக அதிகமாக வணக்கம் புரிபவர்களாக இருந்தார்கள். அதிலும் ரமழானின் இறுதிப் பத்தில் மிக அதிகமாக வணக்கம் புரிந்து வந்தார்கள்.
அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிப்பதாவது : "நபி (ஸல்) அவர்கள் மற்ற மாதங்களைவிட ரமழானில் அதிகமாக அமல் செய்வார்கள். குறிப்பாக ரமழானின் ஏனைய நாட்களைவிட பிந்திய பத்து நாட்களில் அதிகம் அமல் செய்வார்கள்." (ஸஹீஹ் முஸ்லிம்)
அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள் : "நபி (ஸல்) அவர்கள் ரமழானின் கடைசிப் பத்தில் நுழைந்துவிட்டால் முழு இரவும் வணங்குவார்கள். குடும்பத்தினரையும் விழிக்கச் செய்வார்கள், தங்களது ஆடையை இறுக்கக் கட்டி உற்சாகத்துடன் வணக்கத்தில் ஈடுபடுவார்கள்." (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்கள் லைலத்துல் கத்ரைத் தேடுமாறு ஏவுவார்கள். "ரமழானின் கடைசிப் பத்தில் லைலத்துல் கத்ரைத் தேடிக் கொள்ளுங்கள்." (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்) என்று கூறி அந்த இரவில் நின்று வணங்க ஆர்வமூட்டுவார்கள்.
மேலும் கூறினார்கள் : "ரமழானின் கடைசிப் பத்தில் ஒற்றைப் படை இரவுகளில் லைலத்துல் கத்ரை தேடிக் கொள்ளுங்கள்." (ஸஹீஹுல் புகாரி)
மேலும் கூறினார்கள் : "எவர் லைலத்துல் கத்ர் இரவில் ஈமானுடனும் நன்மையை நாடியும் நின்று வணங்கவாரோ அவரது முன்பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும்." (ஸஹீஹ் முஸ்லிம்)