நட்புணர்வு இல்லாத உயிர்களே இல்லை என்று கூறலாம். பறவைகள், விலங்குகள், மனிதர்கள் மட்டுமின்றி, தாவரங்களிலும் அந்த உணர்வு அமைந்துள்ளதை காண்கின்றோம்.
உயிரணைத்திலும் நீக்கமற நிறைந்துள்ள அன்புதான் பாசமாகவும், நட்பாகவும் உறவுகளில் மலர்கிறது என்று ஆன்மீக வழிகாட்டிகள் கூறுகின்றனர். பிறப்பின் அடிப்படையில் பாசமும், பால் உறவின் அடிப்படையில் காதலும் ஏற்படுகின்றதென்றால், முதல் அறிமுகத்தில் புன்னகையாய் மலர்ந்து, புரிந்துணர்வில் வளர்ந்து, துன்பத்தையும் இன்பத்தையும் ஒன்றிணைந்து எதிர்கொண்டதால் வேரூன்றி, பலமாகவும் ஆழமாகவும் உள்ளேயும் வெளியேயும் ஆல மரமாய் வளர்வது நட்பு.
கொள்கை, கருத்து, வாழ்நிலை அனைத்தையும் பொருட்படுத்தாத நட்பு, விலங்கிற்கும் மனிதனிற்கும் இடையே கூட வேர் விட்டு செழித்துள்ளது.
நட்பு எனும் இந்த ஆழ்ந்த அன்புணர்வு தமிழ்நாட்டில் ஒரு நேரத்தில் வாழ்ந்த - அரசியல், கொள்கையால் எதிரெதிர் துருவங்களாக இருந்த - இரண்டு பெரும் தலைவர்களிடையே செழித்தோங்கியிருந்தது தமிழ்நாட்டின் அரசியல், சமூக வரலாற்றில் குறிப்பிடத்தக்கதாகும்.
விடுதலைப் போராட்ட காலத்தில் இந்த இரண்டு தலைவர்களும் காங்கிரஸில் இருந்து நாட்டின் விடுதலைக்காக போராடினார்கள். விடுதலை வேட்கையை சமமாக சுமந்த இந்த இருவருக்கும் இடையில் நமது சமூதாயத்தில் நிலவிய சாதியக் கூறு ஓர் பெரும் விரிசலை ஏற்படுத்தியது. காங்கிரஸ் கட்சியின் நிதியுதவியுடன் நடத்தப்பட்ட சேரன்மாதேவி குருகுலத்தில் பயின்ற மாணவர்கள் மத்தியில் சாதிய வேற்றுமை நடைமுறையாய் இருந்ததை கடுமையாக எதிர்த்த தந்தை பெரியார், முதலில் தேவை சமூக விடுதலையே என்று முடிவெடுத்து சாதியத்தையும், அதற்கு ஆணிவேராய் நின்ற பிராமண மேலாதிக்கத்தையும் எதிர்த்து காங்கிரஸை விட்டு வெளியேறி சுய மரியாதை இயக்கம் கண்டார்.
காங்கிரஸில் நீடித்த சக்ரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார் வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட இரட்டை ஆட்சி முறையினால் தமிழ்நாட்டின் முதல்வரானார். அவர் இந்தியை கட்டாயப் பாடமாக்கியபோது அதனை பெரியார் கடுமையாக எதிர்த்து போராடினார். தமிழ்நாட்டில் இந்தித் திணிப்பை எதிர்த்து நடந்த முதல் போராட்டம் வெள்ளையர் ஆட்சிக் காலத்திலேயே நடந்தது.
சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவின் முதல் ஆட்சித் தலைவராக இருந்துப் பிறகு சென்னை மாகாணத்தின் பிரதமரானார் இராஜாஜி. அப்பொழுது குலக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தார். இதனையும் பெரியார் கடுமையாக எதிர்த்துப் போராடினார். அதனால் இராஜாஜி ஆட்சியை இழக்கும் நிலை ஏற்பட்டது. காமராசர் தமிழ்நாட்டின் (1954) பிரதமரானார்.
இப்படி எதிரெதிர் கொள்கைகளுடன் அரசியலில் இருந்த இந்த இரு தலைவர்களுக்கும் இடையே இருந்த நட்புறவு, அவர்களின் கொள்கை சார்ந்த மாறுபாடுகளைக் கடந்ததாக இருந்ததற்கு ஒரு அத்தாட்சிதான் திராவிட இயக்க வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாக பதிவாகியுள்ளது.
தந்தை பெரியாருடன் இணைந்து பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்து, தமது அபார நாவண்மையால் தமிழக மக்களை ஈர்த்த அறிஞர் அண்ணா, 1949ஆம் ஆண்டு திராவிடர் கழகத்திலிருந்து விலகி திராவிட முன்னேற்றக் கழகத்தை துவக்கினார்.