மத்திய பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக, அயல்நாடு வாழ் இந்தியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். நாடாளுமன்றத்தில் நேற்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் 2008-09 ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார் .
இது பற்றி துபாயில் வாழும் அயல்நாடு வாழ் இந்தியர்கள் இடையே விவாதம் நடந்தது. இதில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு.
பட்ஜெட்டில் பங்குச் சந்தையின் மூதலீடு மீதான குறுகிய கால இலாபத்திற்கு ஐந்து விழுக்காடு வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வரி முன்பு 10 விழுக்காடாக இருந்தது, தற்போது 15 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அயல்நாடு வாழ் இந்தியர்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது பாதிக்கப்படும்.
நிதி அமைச்சர் எதிர் வரும் தேர்தலை கருத்தில் கொண்டு சில இனங்களுக்கு உற்பத்தி வரி குறைத்துள்ளார். தனி நபர் வருமான வரி விலக்கு வரம்பையும் உயர்த்தியுள்ளது பாராட்டுக்குரியது அதே நேரத்தில் எங்களுக்கு எவ்வித சலுகையும் இல்லை என்று கூறியுள்ளனர்.
சார்ஜாவில் உள்ள இந்தியன் பிசினஸ் அண்ட் புரோபஷனல் கவுன்சில் சேர்மன் சுதிஷ் அகர்வால் கூறுகையில், " நிதி அமைச்சர் அயல் நாடு வாழ் இந்தியர்களை முழுவதுமாக புறக்கணித்துள்ளார். எங்களை தேவையில்லாத இந்தியர்கள் என்று ஒதுக்கியுள்ளார்". என்று கூறினார்.
அபுதாபி வர்த்தக மற்றும் தொழில் சங்க கூட்டமைப்பின் இயக்குநர் யூசுப் அலி கூறுகையில், " அயல்நாடு வாழ் இந்தியர் என்ற முறையில், அரசு லட்சக்கணக்கான அயல்நாடு வாழ் இந்தியர்களை, குறிப்பாக குறைந்த வருவாய் உள்ளவர்களின் கஷ்டத்தை பரிசீலிக்க வேண்டும். அவர்களின் நலனுக்கான திட்டத்தை அறிவிக்க வேண்டும் " என்று கூறினார்.
அல் ரோஸ்தாமி குழுமத்தி்ன் நிதி சேவை பிரிவு தலைமை நிர்வாக அதிகாரி பி.கிருஷ்ண மூர்த்தி கூறுகையில்" இந்த பட்ஜெட்டில் நுகர்வோர் பொருட்கள் மீது மறைமுக வரிகள் குறைக்கபட்டுள்ளது. இதனால் இதன் விற்பனை அதிகரிக்கும். அத்துடன் கல்வி,உடல்நலன் போன்ற சமூக நல துறைகள், மூத்த குடிமக்கள்,பெண்கள் மற்றும் மத்தியதர வருவாய் பிரிவினருக்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது பாராட்டத்தக்கது. அதே நேரத்தில் குறுகிய கால முதலீடு மீது விதிக்கப்படும் வரி 5 விழுக்காடு அதிகரித்து இருப்பது பாதிப்பை ஏற்படுத்தும் " என்று கூறினார்.
டான்ஜிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் அஸிக் ஹூசைன் கூறுகையில், " இந்த பட்ஜெட்டில் பொருளாதார நடவடிக்கையை விட, அரசியல் ரீதியான நடவடிக்கையே அதிக அளவு உள்ளது. தேர்தல் காலமாக இருப்பதால், மற்ற வகையில் எதிர்பார்க்க முடியாது" என்று கூறினார்.
அல்மயா குழுமத்தின் இயக்குநர் கமல் வசானி கூறகையில்," வருமான வரி வரம்பு உயர்வு, உற்பத்தி வரி குறைத்திருப்பது மத்திய வருவாய் பிரிவினருக்கு பயனளிக்கும். சிறு விவசாயிகள் கடனை ரத்து செய்து இருப்பது வரவேற்கத்தக்கது " என்று கூறினார்.
|