வேளாண் கூட்டுறவு வங்கிகளில் சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் பெற்ற கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்று நிதியமைச்சர் சிதம்பரம் அறிவித்துள்ளார்!
நாடாளுமன்ற மக்களவையில் 2008-09 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை இன்று தாக்கல் செய்த நிதியமைச்சர் ப. சிதம்பரம், 2 ஹெக்டேர் (6 ஏக்கர்) வரை நில உடமை உள்ள சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு வேளாண் கூட்டுறவு வங்கிகள் அளித்துள்ள கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது என்று கூறினார்.
இதற்காக ரூ.50,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறிய சிதம்பரம், மற்ற விவசாயிகள் பெற்ற வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்வதற்கு மேலும் ரூ.10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
விவசாயிகள் பெற்றுள்ள கடன்கள் அனைத்தையும் வரும் ஜூன் 30 ஆம் தேதிக்குள் ரத்து செய்து கணக்கை முடிக்குமாறு வேளாண் வங்கிகளுக்கு நிதியமைச்சகம் உத்தரவு பிறப்பிக்கும் என்று கூறிய சிதம்பரம், கடன் ரத்து செய்யப்பட்ட விவசாயிகள் அனைவரும் மீண்டும் கடன் பெறலாம் என்று அறிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு கடன் அளிக்க ரூ.2,80,000 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் சிதம்பரம் கூறினார்.
|