தங்கநாற்கர சாலை திட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணியின் பெரும் பகுதி முடிவடைந்துவிட்டது. கடந்த நவம்பர் வரை இந்த திட்டத்தில் சுமார் 96 விழுக்காடு பணி நிறைவுபெற்று விட்டது.
இத்திட்டத்தின் கீழ் 5,629 கிமீ தூரத்திற்கு சாலை மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள வகை செய்யப்பட்டிருந்தது. 7,744 கிமீ நீளமுடைய தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணி இவ்வாண்டு டிசம்பருக்குள் நிறைவடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மூன்றாவது தொகுதி தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 12,109 கிமீ நீளமுடைய சாலைகளை ரூ.80,626 கோடி மதிப்பீட்டில் தரம் உயர்த்துவதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் நான்காவது தொகுதி தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 20 ஆயிரம் கிமீ நீளமுடைய சாலைகளை இருவழிப் பாதையாக மாற்றுவதற்கு அரசு உத்தேசித்துள்ளது.
ஐந்தாவது தொகுதி திட்டத்தின் கீழ் 6,500 கிமீ நீளமுடைய சாலைகளை ஆறுவழிச் சாலைகளாக ரூ.41,210 கோடி செலவில் மாற்றுவதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த திட்டத்தின் ஆறாவதி தொகுதியின் கீழ் ரூ.16,680 கோடி செலவில் 1,000 கிமீ நீளமுடைய விரைவுச் சாலைகளை அமைக்கவும், ஏழாவது தொகுதி திட்டத்தின் கீழ் வட்டச் சாலைகள், சேவை சாலைகள் போன்றவற்றை அமைக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இத்தகவல்கள் மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
|