முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > வெப்துனியா சிறப்பு > குடியரசு ‌தின‌ம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
குடியரசு ஆட்சியில் இரண்டுபட்ட இந்தியா!
- இரா. செழியன்
webdunia photoWD
இந்நாடும், மக்களும் சந்தித்த எண்ணற்ற பிரச்சனைகளை நாடாளுமன்றத்தில் எழுப்பி, தீர்வுகள் எட்டப்படுவதற்கு தனது வாதத்தின் மூலம் வழியமைத்தவர் இரா.செழியன். முழுமையாக படித்தாகவேண்டிய இக்கட்டுரையில் நமது குடியரசின் நோக்கத்தையும், நாட்டின் இன்றைய நிலையையும் ஒப்பிட்டுக் காட்டியுள்ளார் சிறந்த நாடாளுமன்றவாதி என்று பெயர் பெற்ற இரா.செழியன்.

- ஆசிரியர்.

குடியரசு ஆட்சியில் இரண்டுபட்ட இந்தியா!

1947, ஆகஸ்ட் 15 இந்தியாவிற்கு விடுதலை கிடைத்த நன்னாள். அதன்பிறகு நாட்டின் ஆட்சி முறையைத் தீர்மானிக்க அரசியல் நிர்ணய சபை நியமிக்கப்பட்டது. 1946 டிசம்பர் 9 ஆம் தேதி தொடங்கி 1950 ஜனவரி 25 ஆம் தேதி வரை பணியாற்றி உருவாக்கப்பட்ட அரசமைப்புச் சட்டத்துடன் அதற்கு மறுநாள் அதாவது 1950 ஜனவரி 26 ஆம் நாள் அன்று இந்தியக் குடியரசு தொடங்கியது. அதனையொட்டி ஆண்டுதோறும் ஜனவரி 26 குடியரசு நாளாகக் கொண்டாடப்படுகிறது.

அரசமைப்புச் சட்டத்தின் குறிக்கோள், வழிமுறைகள் பற்றிய தீர்மானத்தை இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் 1946, டிசம்பர் 13 ஆம் நாளன்று அரசியல் நிர்ணய சபையில் முன்வைத்து அடிப்படையான விவாதத்தைத் தொடங்கினார். அந்தத் தீர்மானத்தில் 'இந்தியா ஒரு விடுதலை பெற்ற, இறையாண்மையுடைய குடியரசு' (Independent sovereign Republic) என்று கூறப்பட்டது. ஆயினும், பின்பு பல ஆலோசனைகளும், திருத்தங்களும் தரப்பட்டபின்பு அரசமைப்புச் சட்டத்தின் முன்வடிவத்தை நிர்ணய சபையின் விவாதத்திற்கு டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் முன்வைத்தபொழுது, இந்தியாவின் அரசியல் அரசமைப்பு ஓர் 'இறையாண்மையுடைய மக்களாட்சியின் குடியரசு' (Sovereign Democratic Republic) என்று கூறப்பட்டது.

ஆயினும், 1975 ஜூன் 25 ஆம் தேதி பிரகடனப்படுத்தப்பட்ட நெருக்கடிக் காலத்தில், இந்திரா காந்தி அரசாங்கம் கொண்டுவந்த 42வது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம், அரசமைப்புச் சட்ட முகப்புரையில், 'சமதர்ம, மதர்சார்பற்ற' எனும் சொற்கள் சேர்க்கப்பட்டன. அதன்பிறகு, முகப்புரையில், இந்தியா ஓர் 'இறையாண்மையுடைய, சமதர்ம, மதசார்பற்ற, மக்களாட்சி முறையின் குடியரசு' (Sovereign Socialist Secular Democratic Republic) என்பது 1977 ஜனவரி 3 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது.

இவ்வாறு, இந்தியாவின் குடியரசு முறைக்குப் பல்வேறு பண்புகள் தரப்பட்டன, வளர்க்கப்பட்டன. இவற்றில் இந்தியக் குடியரசு எந்த அளவிற்கு விரிவடைந்தது, சிறப்பு பெற்றது என்பதை நாம் கவனிக்கலாம்.

தனிப்பட்ட மனிதனுக்குப் பிறப்பிலே சில குறைபாடுகள் இருந்தாலும், நல்லதொரு பெயரைத் தருவதால் அவனுடைய உடல்நலத்தை அதன்மூலம் நிறைவுபடுத்திவிட முடியாது. கண் பார்வை இழந்தவனுக்குச் 'செந்தாமரைக் கண்ணன்' என்ற பெயர் வைப்பதால் அவனுக்கு ஒளிமிக்கக் கண் பார்வையைத் தந்துvsட முடியாது. ஏழைக் குடும்பத்தில் பிறந்தவனுக்குக் குபேரமூர்த்தி என்று பெயர் சூட்டுவதால் அவன் கோடிசுவரராக ஆகிவிடுவதில்லை. அதைப்போல், ஒரு நாட்டுக்குப் பல்வேறு பண்பாடுகளை அடுக்கி வைப்பதால் மட்டுமே அந்த நாட்டை வளம்படுத்திவிட முடியாது.

1977இல் சமதர்ம நாடாக இந்தியாவின் குறிக்கோள் எழுதிவைப்பட்டது. அவ்வாறு சமதர்ம நாடு என்று இந்தியாவை அழைக்க வேண்டும் என்ற கோரிக்கை அரசியல் நிர்ணய சபையில் எழுப்பப்பட்டது. 1946, டிசம்பர் 13 ஆம் நாளன்று அரசமைப்புச் சட்டத்தின் குறிக்கோள் - வழிமுறைகளைப் பற்றிப் பிரதமர் நேரு பேசிய பொழுது அதைக் குறிப்பிட்டார்: "இந்தத் தீர்மானத்தில் சிலர் சமதர்ம நாடாக இந்தியா குறிப்பிடப்பட வேண்டும் என்று கூறினார்கள். நான் சமதர்மத்துக்காகப் பாடுபடுவேன். இந்தியாவில் சமதர்மம் நிறைவேறும் என்று நான் நம்புகிறேன். சரியான மக்களாட்சி முறையில் இயங்குகிற ஒரு நாடு சமதர்ம நாடாக ஆகிவிடும் என்று நான் எதிர்பார்க்கிறேன். இன்னும் கூறப்போனால் உலகில் ஒவ்வொரு நாடும் சமதர்மக் குறிக்கோளை நோக்கிச் செல்லும் என்று நான் நினைக்கிறேன். எல்லோருக்கும் பிடித்தமான ஒரு முடிவை நாம் இப்பொழுது எடுக்க முடியாது. இந்தத் தீர்மானம் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படும் வகையில் அமைய வேண்டும் என்பதால், சமதர்மக் குறிக்கோளை இங்கு வலியுறுத்த வேண்டாம் என நான் நினைக்கிறேன்."

சமதர்மவாதியாகத் தம்மைக் குறிப்பிட்டுக் கொண்ட ஜவஹர்லால் நேரு அவர்களே குடியரசு முறையில் நாடு நன்கு செயல்பட்டால் அதுவே சமதர்ம நாடாக ஆகிவிடும் என்று நம்பினார். 1948இல் அரசாங்கத் தொழில் கொள்கையை வகுத்த பொழுது, 'to be interpreted in terms of the socialistic objective' அதாவது, 'சமதர்மக் குறிக்கோளை வலியுறுத்தும் வகையிலான திட்டம்' என்று பிரதமர் ஜவஹர்லால் நேரு கூறினார். 1955 ஜனவரி 21 ஆம் நாள் ஆவடியில் யூ.என். தேபர் தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் 'Socialistic Pattern of Society' - அதாவது, சமுதாயத்திற்குச் சமதர்ம முன்மாதிரியான குறிக்கோள்' பற்றி தீர்மானத்தை ஜவஹர்லால் நேரு முன்மொழிந்து பேசினார், அதனைக் காமராஜர் வழிமொழிந்தார். தீர்மானம் முழுமனதாக மாநாட்டில் நிறைவேறியது.
1 | 2 | 3  >>  
மேலும்
மனித உரிமை மீறல்கள் : அதிகரித்துள்ளதா? குறைந்துள்ளதா?
குடியரசு ‌தின வாழ்த்து அட்டை!
அடிப்படை உரிமை விழிப்புணர்விற்கு கல்வி அவசியம்!
ஏற்றத் தாழ்வைக் களைவோம் : பாபா சாஹேப் அ‌ம்பே‌‌த்கர்!
பெருமைக்குரிய பெரும் தினம்!
எவரெல்லாம் உண்மையான குடிமக்கள்?