"கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி.... விவசாயி" என்று அழைக்கப்படும் உழவனின் இந்தாண்டு அறுவடைத் தொடக்கம் எந்த நிலையில் உள்ளது என்றால் மத்திய நிவாரணக்குழு வந்து அண்மையில் பெய்த மழையால், அறுவடை செய்ய வேண்டிய நெற்கதிர்களுக்கான இழப்பீட்டை முடிவு செய்ய வேண்டிய பரிதாபகரமான அவல நிலையில் தான் உள்ளது.
ஏதோ இந்த ஆண்டில் பெய்த மழையால் இந்த நிலை உருவாகிவிட்டதாக மட்டும் கருதி விட வேண்டாம். நாட்டில் உள்ள மூன்றில் இரண்டு பங்கு மக்களின் வாழ்க்கையே உழவுத் தொழிலை நம்பித்தான் உள்ளது. இந்தியா கிராமங்களில் வாழ்கிறது. பெரும்பான்மையான மக்கள் கிராமங்களில்தான் வசித்து வருகின்றனர்.
ஆனால் நாடு சுதந்திரமடைந்து 60 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் இன்று 110 கோடி மக்களுக்கு வயிறார சாப்பிட உழைக்கும் விவசாயியின் நிலை மட்டும் ஏனோ அதலபாதாளத்தை நோக்கியே விரைந்து சென்று கொண்டிருக்கிறது. இந்த இழி நிலைக்குதான் காரணம் என்ன?
உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனைச் செய்வோம், வீணே தினம் உண்டு கழிப்போரை நிந்தனைச் செய்வோம் என்று பாடினார் பாரதி.
இன்றைய திறந்த பொருளாதாரமும், தாராளமயமாக்கலும் கிராமத்து விவசாயி தனது காணி நிலத்தை விற்றுவிட்டு பெண்டு, பிள்ளைகளின் வயிற்றுப் பசியைப் போக்க பிறந்த மண், கலாச்சாரம், சொந்த பந்தங்களையெல்லாம் உதறிவிட்டு நகர்புறங்களுக்கு குடிப்பெயர வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாக்கப்பட்டுள்ளான்.
தனக்கு இருக்கின்ற கொஞ்சுண்டு நிலத்தில் விவசாயம் செய்யக் கூட இன்றைய விலைவாசி அவனை அனுமதிக்க மறுக்கிறது. விவசாய இடுபொருட்களின் விலை உயர்வு விவசாயியின் ஆதாரத்தையே அசைத்து பார்க்கிறது. என்ன செய்வான் அவன், உள்ளூர் வட்டிக்காரர்களிடம் கடன் வாங்க நினைத்தாலே முதலிற்க்கே மோசம் ஏற்பட்ட பழைய வடுக்கள் அவன் கண்முன்னால் வந்து நிழலாடுகிறது.
ஆனாலும் வேறு வழித் தெரியாமல் கடன் வாங்கி செய்யும் தொழிலையும் சில நேரங்களில் இயற்கையின் சீற்றமும், பல நேரங்களில் நம்முடைய அரசியல்வாதிகளும் ரொம்பவும் அதிகமாக சோதிக்கின்றனர். ஒருபுறம் இயற்கையின் சீற்றத்தை தாக்கு பிடிக்க முடியாத விவசாயி, மறுபுறம் அரசு வங்கிகளில் வாங்கிய கடனைச் திருப்பி செலுத்த முடியாமல் தனது உயிரையே மாய்த்துக் கொள்ளும் துர்பாக்கியமான முடிவைத் தேடும் அவலம்.
ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் 3,000-த்திற்க்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதன் விளைவாக பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் சீரழிந்த பின்னர் தான் அரசு விவசாயிகளுக்கு துயர் துடைப்பு நிதியையும், வங்கிகள் மூலம் கடன் வழங்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சரி இனிமேலாவது விவசாயிகளின் துயரம் நீங்கிவிடும் என்று நாம் நினைத்தால் அது தவறு.
கடந்த நூறு ஆண்டுகளில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டிருக்கும் எல்லாச் சீர்திருத்தங்களும் வெறும் அலங்காரமாகத்தான் இருக்கின்றன, ஒவ்வொரு சீர்திருத்தமும் முதல் இரண்டு உயர்சாதி மக்களுக்குச் சம்மந்தப்பட்டவையே மற்ற மக்களுக்கு ஒரு சிறிதும் சம்மந்தமானவை அல்ல என சுவாமி விவேகானந்தர் கூறியது போன்று தற்போதைய மக்கள் நலத் திட்டங்கள் உள்ளது தான் இந்த அவல நிலைக்கு காரணம்.
|