பட்டாசு விலை கூடினாலும் மக்களிடையே வாங்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது என்று பட்டாசு வியாபாரி ஒருவர் கூறுகிறார்.
தீபாவளி வந்து விட்டாலே மகிழ்ச்சிதான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சந்தோசமாக இருக்கும் நேரம் பட்டாசு வெடிக்கும் நேரம்தான்.
தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளது. அதற்குள் களை கட்டிவிட்டது பட்டாசு விற்பனை. பட்டாசு கடைகளில் பெரியவர்கள் வந்துதான் பட்டாசு வாங்குவார்கள், ஆனால் குழந்தைகளும் கூட வந்து வாங்கும் அளவுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது.
தற்போது மழை காலம் என்பதால் சில இடங்களில் விற்பனை மந்தமாக உள்ளது. தி.நகரில் பட்டாசு கடைகளை காண முடியவில்லை. புரசைவாக்கத்தில் ஒரு சில கடைகளே உள்ளன. தற்போது மிகவும் களை கட்டி இருப்பது பிராட்வேதான்.
அங்கு அனைத்து தரப்பு மக்களும் கடைகளில் பட்டாசுகளை விரும்பி வாங்கிச் செல்கின்றனர். வியாபாரமும் ஜோராக நடந்து வருகிறது. மற்ற இடங்களில் இன்னும் சில நாட்களில் விற்பனை களை கட்டி விடும் என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.
சென்னையில் சாலைகளின் ஓரங்களில் பட்டாசுகளை விற்க தடை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனால் பட்டாசுகளை விற்பனை செய்யும் போது தகுந்த பாதுகாப்புடன் விற்பனை மையத்தை அமைக்க வேண்டும் என்று நீதி மன்றம் கண்டிப்பான உத்தரவு போட்டுள்ளது.
இதனால் கடை வைத்தால் எந்த அளவுக்கு லாபம் கிடைக்கும் என்று சாலையோர வியாபாரிகள் யோசிக்க தொடங்கியுள்ளனர்.அதனால் தான் சென்னையில் தற்போது அதிகமாகக் கடைகளைக் காண முடியவில்லை.
பட்டாசு உற்பத்தி குறைவாக இருப்பதால் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பட்டாசு விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
இது குறித்து சென்னையில் பட்டாசு விற்பனை கடை உரிமையாளர் எஸ்.முகமத் சாகிப் கூறுகையில், பட்டாசு மொத்த விலை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 32 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது. இதனால் சில்லரை விற்பனையில் 50 விழுக்காடு வரை பட்டாசு விலை உயர்ந்துள்ளது என்றார்.
இது தீபாவளி நெருங்க, நெருங்க விலைகள் மேலும் அதிகரிக்கக்கூடும். இதுதவிர, பட்டாசு சப்ளையும் குறைவாகவே இருந்து வருகிறது. இதனால் பட்டாசு விலை குறைய வாய்ப்பே இல்லை என்று அவர் தெரிவித்தார்.
தீபாவளி சிறப்பிதழ் முகப்பு!
|