இயேசு மனித குமாரன் :
லூக்கா அடியார் இயேசுவை மனித குமாரனாக இவ்வுலகில் வாழ்ந்தார் என்று எழுதுகிறார். சுவிசேஷ புத்தகங்களில் இயேசு மனித குமாரன் என்று 80 முறை காண்பிக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது, இயேசுவானவர் தன்னை மேசியா என்பதைவிட மனித குமாரன் என்று காண்பித்து மனிதகுலத்திற்கு சேவை புரிவதையே நோக்கமாகக் கொண்டார் என்றும் லூக்கா கூறுகிறார். இதற்கு பல நிகழ்ச்சிகளை கூறியிருக்கிறார். அவற்றில் ஒன்றை இப்போது காண்போம்.
உன் விசுவாசம் உன்னை ரட்சித்தது சமாதானத்தோட போ என்றார் (லூக்கா 7 - 50)
இயேசு வாழ்ந்த நாட்களில் பரிசேயர் என்ற குழுவினர் யூத மார்க்கத்தில் இருந்தனர். இவர்கள் யூத மத கோட்பாடுக்ளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இவற்றை விட்டுக் கொடுக்காதவர்களாக பாரம்பரியத்தில் கண்டிப்புள்ளவர்களாக இருந்தனர். எனவே இயேசுவின் போதனைகளை இவர்கள் விரும்பவில்லை.
அவர் மீது குற்றம் கண்டுபிடிக்கும் நோக்கத்தோடும் இருந்தனர் ஒரு முறை பரிசேயரில் ஒருவன் இயெசுவை தன் வீட்டில் பந்தியிருக்க அழைக்க இயெசுவும் இசைந்து பந்தியிருந்தார். அப்போது அந்த ஊரில் பாவியாகிய பெண் ஒரு பரணியில் பரிமள தைலத்தைக் கொண்டுவந்து இயேசுவின் பாதங்களில் தன் கண்ணீரால் நனைத்து தன் தலை மயிரினால் துடைத்து அவருடைய பாதங்களை முத்தஞ் செய்து, பரிமளத்தைலத்தை பூசினாள். இச்செயலை பரிசேயன் விரும்பவில்லை. அவ்வேளையில் அவனிடம் இயேசு இவ்வாறு கூறினார்.
ஒருவனிடத்தில் இரண்டுபேர் : 500 வெள்ளிக் காசும் 50 வெள்ளிக் காசும் கடன்பட்டிருந்தனர். இருவரும் கடனை திரும்ப கொடுக்க முடியாமற் போயிற்று, கடன் கொடுத்தவன் அவர்களை மன்னித்து விட்டான். இப்படியிருக்க இவ்விருவரில் எவன் அவனிடத்தில் மிக அன்பாயிருப்பான் என்றார். பரிசேயன், எவனுக்கு அதிகமாய் மன்னித்து விட்டானோ அவனே அதிக அன்பாயிருப்பான் என்று பதிலளித்தான்.
அது போல இந்த பெண் செய்த அநேக பாவங்களை மன்னிக்கப்பட்டது. எவனுக்கு கொஞ்சம் மன்னிக்கப்படுகிறதோ அவன் கொஞ்சமாய் அன்பு கூறுவான் என்று சொல்லி அந்த பெண்ணை நோக்கி உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்றார் (லூக் 7: 48)
இவ்வாறு பல சான்றுகளைக் கூறி இயேசு தம் வாழ்நாளில் மனித குமாரனாக வாழ்ந்து மனித குலத்திற்கு ஏற்பட்ட இன்னல்களை பகிர்ந்து கொண்டதை எடுத்துரைக்கின்றார்.
|