லூக்கா என்னும் இயேசுவின் அடியார் கி.பி. 65-80 க்குமிடையில் லூக்கா சுவிசேஷத்தை எழுதியதாக வரலாற்றின் மூலாம் அறியலாம். இவர் இயேசுவின் காலத்தில் வாழ்ந்தவரும், இயேசுவின் இறைச் செய்தியை அந்நாட்களில் பல அண்டை நாட்களுக்கு எடுத்துச் சென்றவருமான பரி. பவுலின் நண்பர். இவர் மருத்துவர் என்பதும், யூத குலத்தை சேர்ந்தவரல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது. லூக்கா அடியார் விவிலிய நூலில் உள்ள "அப்போஸ்தலருடைய நடபடிகள்" என்ற மற்றொரு புத்தகத்தையும் எழுதியுள்ளார்.
இவர் இயேசுவை ஒரு வேளை நேராகக் கண்டதாகத் தெரியவில்லை. லூக்கா அடியார் தம் சுவிசேஷ புத்தகத்தில் எழுதியுள்ள அனைத்தும் நேர் முகமாகக் கண்டவர்கள் அவர்களே சொன்னபடி, எல்லாவற்றையும் திட்டவட்டமாய் விசாரித்து பின்னர் எழுதியுள்ளதாக கூறுகிறார். இந்த நிச்சயத்தோடு எழுதியுள்ள லூக்கா அடியார், இயேசுவைப் பற்றி என்ன சொல்கிறார் என்பதை இப்போதுக் காண்போம்.
இயேசு மனிதகுலத்திற்கு சொந்தமானார் :
இயேசுவானவர் உலக மரபுப் படி யூத குலத்தில் பிறந்தவர் என்பதை நாம் அறிவோம். ஆனால் லூக்கா, இயேசு ஒரு குறிப்பிட்ட மக்களை சேர்ந்தவர் அல்ல; இவ்வுலகிற்குச் சொந்தமானவர் என்பதை வெளிப்படுத்துகிறார். இயேசுவின் சீடரான பரி. மத்தேயு இயேசுவின் வரலாற்றைக் கூறும் போது, ஆபிரகாம் முதல் தொடங்கி, இவரின் வாரிசுகளை வரிசைப் படுத்தி, இயேசுவின் சரித்திரத்தைக் கூறுகிறார். இதன் மூலம் இயேசு ஒரு குறிப்பிட்ட வம்ச வழியில் வந்தவர், சொல்லப் போனால் யூதகுல வழி வந்தவர் என்பதை நாம் மத்தேயு சுவிசேஷத்தில் பார்க்கிறோம்.
ஆனால், லூக்கா அடியார், இயேசுவின் சரித்திர வம்ச வரலாறு ஆதாம் வரை செல்கிறது என்பதை கூறுகிறார். அதாவது இயேசுவின் முன் சந்ததியினர் ஆபிரகாம் வரை என்றில்லாமல், உலக முதல் மனிதன் ஆதாம் தொடங்கி வருகிறது என்பதை இயேசுவின் முன் வாரிசுகளை, லூக்கா பட்டியலிட்டு காண்பிக்கிறார் இவ்வாறு யூத வழிவராத லூக்கா அடியார் யூத வழி வந்தவரான இயேசுவைக் குறித்து எவ்வளவு அறிந்திருந்தால் இயேசு இம்மனுகுலத்திற்கு சொந்தமானவர் என்ற உண்மையை உலகிற்கு இப்படி தெரியப்படுத்துவார்.
இச் செய்தியை இயேசுவின் பிறப்பிலும் நாம் காண்போம் என்கிறார். இயேசு பிறந்த போது தேவதூதர்களின் பிறப்பின் செய்தி இப்படி கூறுகிறது.
"உன்னதத்திலிருகிற தெவனுக்கு மகிமையும் பூமியிலேயே சமாதானமும் மனுஷர் மேல் பிரியமும் உண்டாவதாக (லூக்கா 2 : 14) இவ்வாறு, இயேசுவின் பிறப்பின் செய்தி, இப்பூமிக்கு இவ்வுலகிற்கு, இந்த மனுகுலத்தனைத்திற்கும் அறிவிக்கப்பட்ட மகிழ்ச்சியின் ஆரவாரம் என்றும் இது ஒரு நாட்டினருக்கோ, குறிப்பிட்ட மக்களுக்கோ மனதில் கொண்டு அறிவிக்கப்பட்ட ஒன்று அல்ல என்பதை வெளிப்படுத்துகிறார்.
மனதிரக்கமுள்ள நண்பர் :
இயேசு ஒரு மனதிரக்கமுள்ள உற்ற நண்பர் என்பதை அன்று நடந்த பல நிகழ்ச்சிகள் மூலம் கூறுகிறார். அவற்றில் இயேசு சொன்ன நல்ல சமாரியன் கதையை இப்போது காண்போம்.
உன்னிடத்தில் அன்பு கூறுவது போல பிறனிடத்திலும் அன்பு கூறுவாயாக (லூக்கா 10 : 27)
ஒரு சமயம் இயேசுவிடம் "பிறன்" என்று மேலே குறிப்பிட்டிருப்பது யார் என்று கேள்வி எழுப்பினர். அப்போது அவர் இவ்வாறு கூறினார்.
ஒரு மனிதன் எருசலேமிலிருந்து எரிகோ என்னும் நகருக்கு போகையில் வழியில் கள்ளர் கையில் அகப்பட்டு காயமுற்றுக் குற்றுயிராகக் கிடந்தான். அவனுடைய வஸ்திரங்களெல்லாவற்றையும் கள்வர் எடுத்துச் சென்று விட்டனர்.
அவ்வழியே ஆசாரியன் ஒருவன் சென்றான். காயமுற்றவனைக் கண்டு பக்கமாய் விலகிப் போனான். அப்படியே லேவியனும் விலகிச் சென்று விட்டான். இந்த ஆசாரியர் லேவியர் என்போர் அந்நாட்களில் சமூகத்தில் உயர் மட்டத்தில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்றாவதாக அவ்வழியே ஒருவன் சென்றான்.
அவன்தான் சமாரியன் என்பவன் அவன் அந்த காயமுற்றவனுக்கு காயங்கட்டி, தன் சுயவாகனத்தில் ஏற்றி அருகில் இருந்த சத்திரத்தில் வைத்து பராமரித்தான்.
மறு நாள் தான் புறப்படும்போது இரண்டு பணத்தை சத்திரக்காரன் கையில் கொடுத்து காயமுற்றவனை பார்த்துக் கொள்ளும்படியும், அதிகமாய் ஏதாவது செலவழித்தால் அவன் திரும்பி வரும் போது தருவதாகவும் கூறிச் சென்றான். இதைச் சொல்லி, இம்மூவரில் எவன் "பிறன்" என்று இயேசு கேட்க இரக்கஞ் செய்தவனே என்று கேட்டவர்களே பதில் சொன்னார்கள் இக்கதையின் மூலம் இயேசு, கைமாறு கருதாமல் உதவி, ஒருவனை இடுக்கண்ணில் தாங்குவது, சமூக நீதி, அன்பு, தியாகம் என்று பல சத்தியங்களை சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.
உச்ச கட்டமாக இரக்கத்தை வெளிப்படுத்தும் இயேசுபிரான், எவ்வளவு இரக்கமுள்ளவராயிருந்தால் பிறன் என்பதை விளக்க அவர் மனதில் இக்கதை வந்திருக்கும் என்பதை நாம் அறியலாம்.
|