ஆண்டுக்கு ஆண்டு, தேதிக்கு தேதி ஆயிரம் இருக்குது சுபதினம், அடுத்தவர் நலனை கெடுப்பவர் தமக்கே ஆயுள் முழுவதும் சுப தினம் என்ற பாடல் வரிகள் தான் 2007 -ஆம் ஆண்டைக் கடந்து 2008 -ல் அடியெடுத்து வைக்கப் போகும் போது உதடுகள் முணுமுணுக்கும் வைர வரிகளாக உள்ளன!
இதனை நம்மால் மாற்ற இயலுமா என்றால் நிச்சயமாக முடியும். எப்படியென்றால் மாற்றங்களை புரிந்துக் கொண்டு பிளவுகள், பிணக்குகள் அற்ற மனித சமுதாயத்தை உருவாக்க இந்த புத்தாண்டு உங்களை அழைக்கிறது.
ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்தையும் வரவேற்பதற்காக மனிதர்கள் நாம் எத்தனை வகையான தயாரிப்புகளை எல்லாம் மேற்கொள்கிறோம். புத்தாடை, புதிய நகைகள், பக்தி முயற்சிகள், விருந்து வைபவங்கள், புத்தாண்டு இலக்குகள், சுய ஆய்வுகள், பெரியவர்களின் ஆசியைப் பெறுதல், தர்ம காரியங்களில் ஈடுபடுதல் என பல்வேறு புத்தாண்டுத் தயாரிப்புகளில் ஈடுபடுகிறோம். இப்படியாக உலகம் முழுவதும் மக்கள் புத்தாண்டை தொடங்கும் நிலையில் அந்த ஆண்டு இறுதியில், நடைப்பெற்ற நிகழ்வுகளைத் சற்று பின்னோக்கி பார்த்தால் அத்தனையுமே வீணாகிப்போன ஒன்றாகத் தான் புலப்படுகிறது.
நல்ல சிந்தனைகள், செயல்கள், மனப்பான்மையுடன் தானே தொடங்கினோம், பின்னர் ஏன் இந்த நிலை என்பது மட்டும் ஏனோ நமக்கு விளங்காமல் தேவ இரகசியமாகவே நீடிக்கும் அவல நிலை தான் காலம் காலமாக தொடர்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மத, இன, மொழி, அரசியல், வட்டாரத் தலைவர்களின் வாழ்த்துக்களுடன் தான் தொடங்குகிறது. ஆனால் தொடக்கத்தில் நல்லவனாக உள்ள மனிதன் நாளாக நாளாக தனது இலக்கில் இருந்து தடம் புரளத் தொடங்குகிறான். அவனைத் தடம் புரளச் செய்வது எது என்று பார்த்தால், எது மனிதனை நெறிபடுத்தும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோமோ அந்த அமைப்புகள் தான் நம்மை மாற்றுகின்றன.
மனிதச் சமுதாயம் கூடி வாழும் முறையை சார்ந்தது. மேலும் இயற்கை நியதிப்படி ஒரு உயிரினத்தைச் சார்ந்து மற்றொன்று வாழவேண்டும். இந்த அடிப்படையில் மனிதன் குழுக்களாக வாழத் தொடங்கினான். குழுவாக வாழத் தொடங்கிய மனிதன் பின்னர் படிப்படியாக சாதி, இனம், நிறம், மதம், மொழி, தேசியம் என பிரித்து வைக்கப்பட்டான். அதனைத் தொடர்ந்து பல்வேறு தத்துவங்கள், நிலைப்பாடுகள் தோன்றின.
|