இந்த ஆண்டு இந்தியா எல்லா துறைகளிலும் புதிய புதிய மாற்றங்களைச் சந்தித்தது. கண்டுபிடிப்புகள், கேளிக்கைகள் போன்றவற்றுக்கு பஞ்சமில்லாத நிலையில், குண்டுவெடிப்புகள், அரசியல் கலவரங்கள் போன்றவையும் ஏற்படாமல் இல்லை.
அரசியல்
புத்தாண்டு தொடங்கி ஏழாவது நாளில் நாட்டின் வடகிழக்குப் பகுதி கலவரத்தைச் சந்தித்தது. மேற்குவங்க மாநிலம் நந்திகிராமில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜனவரி 7 ஆம் தேதி தொடங்கிய போராட்டங்கள் கலவரமாக மாறி மார்ச் 14 ஆம் தேதி வரை தொடர்ந்து 14 அப்பாவிகளின் உயிர்களைப் பலிகொண்டதையடுத்து பெரும் பிரச்சனையானது.
இந்நிகழ்வு மேற்குவங்க கம்யூனிஸ்ட் ஆட்சியாளர்களுக்கு நீக்கமுடியாத கரும்புள்ளியை தந்ததுடன், நாடாளுமன்றத்திலும் புயலைக் கிளப்பியது. தற்போது உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி மத்தியப் புலனாய்வுக் கழகத்தின் விசாரணையில் உள்ளது.
நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், எரிசக்தி துறையில் தன்னிறைவு பெறுவதற்கும் அவசியம் என்று கூறி பா.ஜ.க. தலைமையிலான தேசிய முற்போக்குக் கூட்டணி அரசால் தொடக்கி வைக்கப்பட்ட இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு மரணக் கயிறாக மாறியுள்ள நிகழ்வு இந்த ஆண்டுதான் நடந்தது.
இருநாட்டு அதிகாரிகளும் நடத்திய பேச்சில் திருப்தி ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஜூலை 27 ஆம் தேதி அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் பணிகள் தொடங்கின. 123 ஒப்பந்தத்தின் முழு வடிவம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வெளியிடப்பட்டது. ஆனால் இடையில் வந்த ஹைட் சட்டத்திற்கு இடதுசாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் ஒப்பந்தத்தை செயல்படுத்தும் பணிகள் முடங்கின.
குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற்றுவந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக லால் கிஷண் அத்வானி அறிவிக்கப்பட்டார்.
தேர்தல்கள்
இந்தியக் குடியரசு வரலாற்றில் முதல்முறையாக குடியரசு தலைவர் பதவிக்கு பெண் ஒருவர் தேர்வு செய்யப்பட்டார். ஜூலை மாதம் 25 ஆம் தேதி நடந்த நிகழ்ச்சியில் நமது நாட்டின் 12 ஆவது குடியரசு தலைவராக, ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் பிரதீபா பாட்டீல் பதவியேற்றார்.
அதையடுத்து ஆகஸ்ட் 10 ஆம் தேதி நடந்த நிகழ்ச்சியில், குடியரசு துணை தலைவர் தேர்தலில் வெற்றிபெற்ற மொஹமது ஹமீது அன்சாரி பதவியேற்றார்.
|