காதல் என்றாலே உடலில் உள்ள அனைத்து ஹார்மோன்களும் தலையை தூக்கிப் பார்த்துவிட்டு போகின்றன. அவ்வளவு புத்துணர்ச்சியைக் கொடுக்கும் விஷயம் காதல்தான்.
காதலிக்கத் துவங்கிவிட்டாலே உடலில் ஒரு பரபரப்பு வந்து ஒட்டிக் கொள்ளும். நாம் காதலிப்பதை உரிய நபரிடம் சொல்லும்வரை கத்திமேல் வாழ்க்கைதான்.
அவரிடம் சொல்லி ஒப்புதல் பெற்றாலும் அந்த பரபரப்பு வேறொரு ரூபத்தில் நம்மை சுற்றிக் கொண்டிருக்கும்.
ஆம், பொது இடங்களில் எங்காவது ஒன்றாகச் செல்லும்போது இருவருக்கும் தெரிந்தவர்கள் யாராவது பார்த்துவிட்டால்... ஏன் பெற்றோர் யாராவது பார்த்துவிட்டால் என்ற அந்த அச்சமும் கொஞ்சம் சுவாரஸ்யமானதுதான். அது அனுபவித்தவர்களுக்கு மட்டும்தான் தெரியும்.
இதுபோன்று காதலர்கள் காதலிக்கும் நேரத்தில் பல்வேறு விஷயங்களுக்கு பயந்து வாழ வேண்டியுள்ளது.
இதெல்லாம் ஒரு விஷயமா என்று கேட்காதீர்கள். இப்போது சொல்லப்போவதுதான் இருப்பதிலேயே பெரிய விஷயம்.
ஆம், நாம் காதலிக்கும் நபரை நமது பெற்றோருக்கு அறிமுகம் செய்து வைக்கும் அந்த ஒரு சந்திப்பு. அந்த நேரத்தில் நமது மனம், சிந்தனை, உடல், செயல் என ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசைகளுக்கு அல்லவா ஓடிக் கொண்டிருக்கும்.
வீட்டிலோ அல்லது கோயில், வெளி நிகழ்ச்சி என எங்கு வேண்டுமானாலும் இந்த சந்திப்பு நிகழலாம். நமது பெற்றோரை காதலர் கவர்வாரா, பெற்றோரது மனதிற்கு பிடித்தவராக காதலர் இருப்பாரா? காரசார விவாதம் வந்துவிடுமா என்று கோடிக்கோடி கேள்விகள் மின்னல் போல சிந்தனையில் சிதறிக் கொண்டிருக்கும்.
பெற்றோரிடம் காதலரைப் பற்றியும், காதலரிடம் பெற்றோரைப் பற்றியும் நாம் சொன்னவைகள் எல்லாம் தண்ணீரில் எழுதியதாகி விடுமா என்ற எண்ணத்தில் நமது மனம் குதிரையாக ஓடிக் கொண்டிருக்கும்.
|