கொழிக்கும் ஆணழகன்! - அவன் கொஞ்சிவந் தேஎனது விழிக்குள் போய்ப்புகுந்தான் - நெஞ்ச வீட்டில் உலாவுகின்றான்! இழுத் தெறிந்துவிட்டே - மற் றின்னொரு வாலிபனை நுழைத்தல் என்பதுதான் - வெகு நூதனம் என்றழுவாள்!
காத லிருவர்களும் - தம் கருத் தொருமித்தபின் வாதுகள் வம்புகள்ஏன்? - இதில் மற்றவர்க் கென்னஉண்டு? சூதுநிறை யுளமே - ஏ துட்ட இருட்டறையே! நீதிகொள், என்றுலகை - அவள் நிந்தனை செய்திடுவாள்!
இல்லத்தின் மாடியிலே - பின்னர் எறிஉரைக்க லுற்றாள்: "இல்லை உனக்கெனக்கு - மணம் என்று முடித்துவிட்டார். பொல்லாத நாளைக்கொ" - வெறும் புல்லனை நான்மணக்க எல்லாம் இயற்றுகின்றார் - பெற்ற எமன்கள் இவ்விடத்தில்!
அடுத்த மாடியிலே - நின்ற அன்பனிது கேட்டான்; துடித்த உள்ளத்திலே - அம்பு தொடுக்கப் பட்டு நின்றான்! எடுத்துக் காட்டிநின்றாள் - விஷம் இட்டதோர் சீசாவை! அடி எனதுயிரே! - அழை அழைஎனையும் என்றான்!
தீயும் உளத்தோனும் - விஷம் தேடி எடுத்துவந்தான்! "தூயநற் காதலர்க்கே - பெருந் தொல்லை தரும்புவியில் மாய்க நமதுடல்கள்! - விஷம் மாந்துக நம்மலர்வாய்! போய்நுகர் வோம்சலியா - இன்பம் பூமியின் கர்ப்பத்திலே!
என்று விஷம்குடித்தார் - அவர் இறப்பெனும் நிலையில் ஒன்றுபட்டுச் சிறந்தார் - இணை ஓதரும் காதலர்கள். இன்றுதொட் டுப்புவியே - இரண் டெண்ணம் ஒருமித்தபின் நின்று தடைபுரிந்தால் - நீ நிச்சயம் தோல்விகொள்வாய்!
|