தென்னந்தோப்பின் இளங்காற்றில் எங்கள் சாயங்காலம் நன்றாயிருந்தது. வாத்துக்கள் மேய்க்கும் மூசா பாய் அந்த வழியாகத்தான் எங்களை கடந்து போக வேண்டும். ஒவ்வொரு வாத்தையும் நாங்கள் தூக்கிப் பார்த்து அதன் கழுத்தழகையும் மழமழவென்றிருக்கிற மென்னியையும் தடவி விட்டுப் பார்த்து அதைத் தண்ணீர் வாய்க்காலில் விடுவோம். இன்றும் அப்படி ஆனதும் இருட்டாகும் போலிருந்தது. லேசாக தூறல் அடித்தது.
எதிரே சசி ஓடி வருவது போலிருக்கிறது.
நான், ரமேஷ், சுசி, ரஞ்சனி, மணி எல்லோரும் ஆவலுடன் அவளை எதிர்நோக்கினோம். சசி ஓடிவரும் வேகம் ஏதாவது ஒரு மரத்தில் இடித்துக்கொள்வான் போலிருக்கிறது. மூச்சு வாங்க எங்கள் அருகே வந்து நின்றாள் அவள்.
நாங்களெல்லாம் எகிறி எகிறி குதித்தோம். நான் சுசியின் காது வளையத்துக்குள் விரலை விட்டேன். “ஐய சும்மா இரேன்,” என்ற அவளின் கட்டளையை மறுத்தேன். “சும்மா இருக்க மாட்டேனே,” என்று நான் மேலும் எகிறி குதித்தேன்.
மணிப்பையன் சட்டென்று என் டிராயரின் பின்பக்க கிழிந்த ஓட்டையில் கையைவிட்டு, “இப்ப என்ன பண்ணுவே,” என்றான். நான் அவனை அடிக்க விரும்பி கையை ஓங்கினேன். சசி என் கையைப் பிடித்துக்கொண்டாள். “சும்மா இருக்க மாட்டீங்களா - நான் என்ன சொன்னேன் இன்னிக்கு சனிக்கிழமைதானே..”
நாங்கள் அமைதியாக தென்னந்தோப்பில் நடந்தோம். குதித்துக்கொண்டும் சண்டையிட்டுக்கொண்டும் இருந்த நாங்கள் அமைதியாக பேசிக்கொண்டு தென்னந்தோப்பைக் கடந்து பெரிய கால்வாய் ஒன்றில் நீர் வேகத்தில் குறுக்கே சில்லென்ரு நடந்து சோளக்கொல்லை வழியாக எங்கள் வீட்டு நிலா மைதானத்தை அடைந்தோம்.
மைதானம் முழுக்க நிலா வெளிச்சம் பரவிக்கிடந்தது.
எங்கள் வீட்டு மைதானத்தில் சின்ன லைட் வெளிச்சம் ஒயர்கொண்டு வந்து கொம்புநட்டு பல்ப் போட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எங்களுக்காக. அங்கே அமைதியாக உட்கார்ந்து புத்தகங்களையும் ஸ்லேட்டுகளையும் நோட்டுக்களையும் கொண்டு வந்து எழுதப் படிக்க ஆரம்பித்தோம். காற்று அருமையாக வீசியது.