|
[மோவாசிர் ஜெய்மி ஸ்க்ளையர் (Moacyr Jaime Scliar) இவர் பிரேசில் நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் மற்றும் மருத்துவர். யூத சமயத்தைச் சேர்ந்தவர். பிரேசிலில் ஒரு யூதனாக இருப்பதைப் பற்றி இவரது கதைகள் பேசத் தவறியதில்லை என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.ஆனால் இந்தக் கதை நகைச்சுவைக்கும் அபத்தச் சுவைக்கும் இடைப்பட்ட ஒரு உணர்வை எற்படுத்தக்கூடியது.] *** நாங்கள், வழக்கம்போல் சீரழிவின் எல்லையிலிருந்தோம். என் தந்தை, சிறு மளிகைக் கடை முதலாளி. அவருக்கு சரக்கு சப்ளை செய்த ஒருவருக்கு எக்கச்சக்கமாக பணம் பாக்கி வைத்திருந்தார். கடனை அடைக்க வழி எதுவும் இல்லை.
ஆனால் தந்தையிடம் பணத்திற்கு குறையிருந்தாலும் கற்பனைக்கு பஞ்சமில்லை, அவர் ஒரு உற்சாக மனோநிலையுடன் கூடிய புத்தி கூர்மையுள்ள பண்பட்டவர். அவர் பள்ளியை முடித்திருக்கவில்லை. ஒரு எளிய மளிகைக் கடையில் விதி அவரை முடக்கிப் போட்டது. இங்கு பிற இறைச்சிகளுடன் மற்றும் பன்றி இறைச்சிகளிடையே இருப்பின் தாக்குதல்களை தைரியத்துடன் எதிர் தாக்குதல் செய்தார். வாடிக்கையாளர்களுக்கு கடன் கொடுத்து, அதைத் திருப்பிக் கேட்காததால் என் தந்தை மீது அவர்களுக்கு எப்போதுமே ப்ரீதி. ஆனால் இவருக்கு சரக்கு சப்ளை செய்பவர்களிடம் இது வேறு கதை. மன உறுதி மிக்க அந்த கனவான்கள், பணத்தை திரும்பிப் பெற விரும்பினர்.
அப்படி என் தந்தைக்கு கடன் கொடுத்த ஒருவர் இந்த விஷயத்தில் தயவு தாட்சண்யமற்றவர் என்பது ஊர் அறிந்தது.
வேறு யாராவதாக இருந்தால் விரக்திக்கு விரட்டியடிக்கப் பட்டிருப்பார்கள். வேறு சிலரோ தலைமறைவாக செல்ல உத்தேசம் பூண்டிருப்பர் அல்லது தற்கொலை கூட செய்து கொண்டிருப்பர். என் தந்தை அப்படி அல்ல. எப்போதுமே தன்னம்பிக்கையான என் தந்தை, அந்த தயவு தாட்சண்யமற்ற கடன்காரரிடமிருந்து விடுபட வழி இருப்பதாகவே நம்பினார். அந்தக் கடன்காரருக்கு பலவீனம் ஏதாவது இருக்க வேண்டும் அதை வைத்துதான் அவரை நாம் பிடிக்கப் போகிறோம் என்று கூட என் தந்தை கூறுவார். அங்குமிங்கும் அக்கம் பக்க விசாரணை மேற்கொண்ட என் தந்தை வளமான நம்பிக்கையுள்ள ஒன்றை தோண்டி கண்டுபிடித்தார்.
தோற்றத்தில் முரட்டுத்தனமான, உணர்ச்சியற்ற மனிதனான அந்தக் கடன்காரருக்கு வான்கோ மீது ரகசிய காதல் இருந்து வந்தது. மிகப்பெரிய அந்த ஓவியரின் மறு படைப்புகள் கடன்காரரின் வீட்டை முழுவதும் அலங்கரித்தன. கிர்க் டக்ளஸ் நாயகனாக நடித்த வான்கோவின் துன்பமான வாழ்க்கை பற்றிய திரைப்படத்தை அவர் குறைந்தது அரை டஜன் முறைகளாவது பார்த்திருந்தார்.
நூலகத்திலிருந்து வான்கோவின் வாழ்க்கை வரலாற்று புத்தகம் ஒன்றை வாங்கி வந்த தந்தை வார இறுதியில் அந்தப் புத்தகத்தில் மூழ்கினார். பிறகு ஞாயிறு மாலையில் அவருடைய படுக்கையறைக் கதவு திறந்தது என் தந்தை வெற்றிக் களிப்புடன் அதிலிருந்து தோன்றினார்.
கண்டுபிடித்து விட்டேன்"!"
|