பூனைகள் இல்லாத வீடு என்ற சிறுகதைத் தொகுப்பில் இருந்து ஒரு சிறுகதை உங்களுக்காக...
தோப்பை விற்பதற்கான எல்லாக் கையெழுத்தும் முடிந்தது. தோப்பை வாங்கும் வட்டிக்கடை பாண்டியன், பணத்தை அப்பாவிடம் நீட்டினார். 'அவங்ககிட்டயே கொடுங்க...' என்று அப்பா, அண்ணனைக் காட்டிவிட்டு வெளியேறினார். அண்ணன் பணத்தை வாங்கிக் கொண்டு, 'நீங்க பஸ்ல வந்திருங்க...' என்று எங்களிடம் சொல்லிவிட்டுப் புதிதாக வாங்கியிருக்கும் கருமையும் நீலமும் கலந்த மோட்டார் சைக்கிளில் ஏறிப் பறந்து விட்டான்.
நானும், அம்மாவும், அக்காவும் பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்து கொண்டிருந்தோம். அம்மாவுக்கு அழுகையை அடக்க முடியவில்லை. சேலைத் தலைப்பால் முகத்தை மூடிக் கொண்டது. அக்கா, அம்மாவைத் திட்டிக் கொண்டே வந்தாள். 'அழுகையை நிறுத்து! உன் பையனுக்கே, சொத்து வேணாங்கிறப்ப உனக்கென்ன வந்தது... போறப்ப தூக்கிட்டா போகப்போற...' என்றாள் அக்கா. அவளுக்கென்ன தெரியும்! அப்பா எங்கள் எல்லோரையும் விட புளியந்தோப்பை அதிகமாக நேசித்தது...புளியந்தோப்பு, அப்பாவுடைய நீண்ட நாள் கனவு. அந்த கனவு நிறைவேறி விட்டது என்று கண்ணை மூடி முழிக்கும் முன் அது வெறும் கனவு தான் என்றாகி விட்டது. வாழ்க்கையில் அனேக கனவுகள் இருக்கலாம்... முதன்முறையாக அப்பாவுக்கு புளியந்தோப்பு கனவு வாழ்க்கையானது.
அப்பாவுடன் முதன்முதலாக நான் காட்டுக்குச் சென்று, அங்கேயே தங்கிவிட்டது எனக்கு இன்னும் ஞாபகத்தில் உள்ளது. அது நிலக்கடலை பிடுங்கும் சீசன். பஸ்ஸில் பயணம் செய்துதான் அந்தக் காட்டுக்குப் போகவேண்டும். அந்த பஸ் பயணத்திற்காகவே எனக்கு அந்தக் காடு ரொம்பப் பிடிக்கும். பஸ்ஸிலிருந்து இறங்கி மூன்று மைல் நடந்து காட்டுக்குப் போக வேண்டும். அம்மா தலையில் கூடையைத் தூக்கி கொண்டு என்னை இடுப்பில் வைத்துக் கொண்டு, 'ஆமா நீ தான் எல்லாக் கடலைச் செடியையும் புடுங்கி ஆயப் போற... எனக்கு இருக்கிற வேலை பத்தாதுன்னு உன்னை வேற தூக்கிட்டுப் போறேன் பாரு...' என்று திட்டிக் கொண்டே வந்தது.
அந்த அதிகாலை இரவில் எங்களுக்கு முன்பேயே, அப்பா காட்டுக்குக் கொத்தாள்களைக் கூட்டிக் கொண்டு போய்விட்டார். அங்கங்கே நிலக்கடலை செடியைப் பிடுங்கி, வீடு போல சுற்றி அடுக்கி வைத்து, ஒவ்வொரு குவியலுக்கும் எதிரெதிராக இருவர் உட்கார்ந்து நடுவில் குழி தோண்டி கம்பு வைத்து கடலைச் செடியை கையில் அடங்கும் மட்டும் எடுத்து அடித்துக் கொண்டிருந்தார்கள். சூரியன் உதிக்காத அந்த காலை நேரத்தில் ஆளில்லாத அந்த குவியலுக்கு, அப்பாவை அழைத்துக் கொண்டு போய் கடலைச் செடியை அடித்துக் கொண்டிருந்தேன். வேலை செய்பவர்களைப் போல் முடி தெரியாமல் இருக்க நானும் தலையில் வண்டு கட்டிக் கொண்டேன். அது அப்பா சரி செய்ய... சரி செய்ய... ஒரு பக்கமாக அவிழ்ந்து கொண்டு வந்தது.
கடலை வீடு வந்து சேர ரெண்டு நாளாகும்... நீ பெரியம்மா கூட வீட்டுக்குப் போ... அம்மாவும், நானும், கடலையை காவக் காக்க இங்கேயே இருக்கோம்...' என்று அப்பா சொன்னதைக் கேட்காமல் அடம் பிடித்து நானும் இரவில் அங்கேயே தங்கி விட்டேன். வாய்க்கால் ஓரத்தில் செடியிலிருந்து ஆய்ந்த கடலையைக் குவித்து களம் செதுக்கியிருந்தார்கள். வாய்க்காலின் இருபுறமும் தென்னை மரங்கள்சாய்வாக வளர்ந்திருந்தது. அப்பா, கம்புகள் வைத்து குட்டியாய் ஒரு குடிசை போட்டிருந்தார். குடிசைக்குள் வைக்கோல் சாக்கு விரிக்கப்பட்டிருந்தது. அந்தக் குடிசை, நான் தட்டாங்குச்சியில் செய்யும் பொம்மை வீடு போல இருந்தது. காட்டை இருள் மூடியதும் எனக்கு பயம் வந்தது. வெள்ளாவி மணக்கும் அப்பாவின் போர்வைக்குள் பூனைக்குட்டியாய் ஒளிந்து கொண்டேன். ராத்திரியில் சங்கீதமாய் குரல் எழுப்பிக் கொண்டு அந்தச் சமவெளியெங்கும் காற்று போன திசையெல்லாம் நானும் சேர்ந்து போனேன் காற்றோடு தூக்கக்கனவில். அந்த இருள் இரவில் அப்பாவைப் போல காடு என்னையும் மறக்கடித்தது.
மறுபடியும் அப்பா என்னை அந்தக் காட்டுக்கு கூட்டிக் கொண்டு போகவே இல்லை. பின்பு தான் தெரிந்தது... அது தற்காலிகமான 'ஒத்திக்காடு' என்பது. ஒரு காட்டுக் கனவு சிதைந்து போயிருந்த வேளையில், அப்பா திரும்பவும் குளத்துக்குப் பக்கத்தில் இருக்கும் இன்னொரு காட்டை வாங்கினார். 'இந்தக் காடு உனக்குத் தாண்டா...' என்று அப்பா சொன்னதும், 'பொட்டப்புள்ளைக்கு என்னைக்கின்னாலும் நகை, நட்டு தான் சொந்தம்... காடு, வீடெல்லாம் ஆம்பளப் பிள்ளைக்குத்தானே சேரும்...' என்ற பக்கத்து வீட்டு நல்லம்மா பாட்டியை முறைத்தார் அப்பா.
அப்பா வாங்குகிற காடுகளுக்குப் பக்கத்தில் அருவி, குளம், வாய்க்கால் இப்படி எனக்கு சந்தோசம் தருகின்ற விசயங்களாகவே இருந்தன. புதுக்காடு வாங்கியதிலிருந்து அம்மாவுக்கும், அப்பாவுக்குமிடையே மனவருத்தம். 'மணல் காட்டை வாங்காம... இப்படி இறுகிப்போன செவளைக் காட்டைக் வாங்கினால் வெள்ளாமை விளங்குமா? என்ற அம்மாவின் வருத்தம், அப்பாவுக்கும் இருக்கத்தான் செய்தது.
பருத்தி விதைச்சா பணம் அதிகமா செலவாகும். ஒரு பூச்சி... புழு இல்லாம பாத்துக்கணும். இப்ப பூச்சி மருந்து விக்கிற வெலையில அது நடக்கிற காரியமா? எள்ளு விதைக்கலாம்னா... அது நொச்சுப் புடிச்ச வேலை. அவசரப்பட்டு இந்தக் காட்டை வாங்கிட்டோமோ! என்று அப்பா குழம்பிப் போயிருக்கும் வேளையில் காடு காவல் காக்கும் நொண்டி மாயாண்டித்தாத்தா வீட்டுக்கு வந்தார்.
எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம். அன்றைக்கு அதை அவரிடமே கேட்டேன். ஏன் தாத்தா நீங்க நல்லா நடக்கும் போதே எல்லோரும் உங்களை நொண்டி மாயாண்டின்னு கூப்பிடுறாங்க? இந்த மூளிப்பய புள்ளைக்கு வேற வேலையே இல்ல... என்று செல்லமாகக் கடிந்து கொண்டே சொல்லத் துவங்கினார். எங்க அப்பன் எம்புட்டு அடிச்சு சித்ரவதை பண்ணியும் நான் பள்ளிக்கூடம் பக்கம் போகலே... கால்ல விலங்கு மாட்டி பள்ளிக்கூடத்தில போட்டுட்டு வந்திடுவாரு... நான் கால் விலங்கை இழுத்துட்டு போறதப் பார்த்த பயலுகளெல்லாம், 'நொண்டி மாயாண்டி'ன்னு அன்னைக்கிருந்து கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க... அதுவே எனக்கு பேராப்போச்சு...' என்று நீட்டி முழங்கினார்.
தாத்தாவுக்குக் காலையிலிருந்து சாயங்காலம் வரைக்கும் பள்ளிக்கூடத்தில் அடைந்து கிடப்பது பிடிக்கவில்லை. அவருக்கு விதவிதமான பறவைகளை வேட்டையாடித் திரிவதுதான் ஆனந்தமாய் இருந்திருக்கிறது. அதற்கு மேல் எதுவும் பண்ண முடியாமல், 'உன் பொழப்பு அம்புட்டுத்தாண்டா...' என்று சொல்லி தாத்தாவின் அப்பாவும், அவரை தன்னோடு காவல் காக்க அழைத்துக் கொண்டு போய்விட்டாராம்.
'அப்ப இருந்து சோளக்காட்டுக்குள்ளேயும், கம்பங்காட்டுக்குள்ளேயும் பரண் மேல உக்காந்து இஷ்டத்துக்கு வேட்டையாடிக்கிட்டிருக்கேன்... அதுவும், பறவை பயிர் மேல உக்காந்ததும் அடிக்க மாட்டேன். அது இரை மேல கவனமா இருக்கிற சமயமா பார்த்து குறி தவறாம ஒரே போடா போட்டிடுவேன்...' என்று தன் வேட்டையாடும் சாகசத்தை அளந்து கொண்டிருந்தார். 'மனசுக்குப் புடிச்ச, வேட்டைக்கு வேட்டையுமாச்சு... பொழப்புக்கு, காடு காக்கிற வேலையுமாச்சுன்னுதான் இந்த வேலைய விருப்பமா செய்யுறேன்... எப்படி என் சாமர்த்தியம்...' என்றார்.
என்னிடம் பேசிக் கொண்டிருந்த தாத்தா, 'என்னடா தங்கம், புதுக்காடு வாங்கியிருக்க போல... உன் காட்டை நான் காவக் காக்குறேன்டா...' அப்பா பக்கம் திரும்பிக் கேட்டார். 'அட போப்பா... காட்ல இன்னும் என்ன விதைக்கிறதுன்னே தெரியல... அதுக்குள்ள காவக்காக்குறதப் பத்தி பேசிக்கிட்டு... எள்ளு வெதைச்சா தொல்லைன்னு பேச்சி சொல்றா... பருத்தி நட்டா, அவ்வளவு பணம் செலவு பண்ண முடியாது. இந்தக் காட்டை வச்சுக்கிட்டு என்ன பண்றதுன்னே தெரியல...' அப்பா அலுத்துக் கொண்டார்.
|