அதனால் நான் நடக்கத் துவங்கினேன். நான் அவரைப் பார்த்தேன். அவரது முகத்தில் நன்றியுணர்ச்சியோ கோபமோ எதுவும் தென் படவில்லை. தொடர்ந்து குடையால் என் தலையில் தட்டிக் கொண்டுதான் இருந்தார். நான் காவல் நிலையத்திற்கு சென்று "சார்! இந்த மனிதர் என் தலையில் குடையால் அடிக்கிறார்," என்று புகார் அளிக்கலாமா என்று கூட யோசித்தேன். இது போன்ற விந்தையான புகாரை எதிர்பார்க்காத அந்த அதிகாரி என்ன செய்வார், என் மீது சந்தேகம் கொண்டு கேள்விக்கணைகளை தொடுப்பார், ஏன் என்னை சந்தேகத்தின் பேரில் கைது செய்தாலும் செய்யலாம்.
எனவே வீட்டுக்கு திரும்பி விடுவது உசிதம் என்று நினைத்தேன். 67ம் எண் பேருந்தை பிடித்தேன். தொடர்ந்து என் தலையில் குடையால் அடித்துக் கொண்டிருந்த அந்த மனிதரும் பேருந்தில் என் இருக்கைக்கு பின்னால் நின்று கொண்டு இடது கையால் பேருந்து கம்பியை பிடித்துக் கொண்டு வலது கையில் உள்ள குடையால் உட்கார்ந்திருந்த என் தலை மீது தட்டிக் கொண்டே வந்தார். முதலில் பயணிகள் இந்த நிகழ்வைப் பார்த்து வெட்கி ஒதுங்குகிற புன்னகைகளை பறிமாறிக் கொண்டனர். பேருந்து ஓட்டுனர் அவரது முன்னால் உள்ள கண்ணாடி வழியாக எங்களை பார்த்தார். கொஞ்சம் கொஞ்சமாக அந்த பேருந்து பிரயாணமே பெரும் சிருப்புகளை ஏற்படுத்த துவங்கியது, தீர்க்க முடியாத பெரும் சிரிப்பாக பேருந்து மாறிப்போனது. தொடர்ந்து என் தலையில் குடையால் தட்டுகள் விழுந்து கொண்டிருந்த போது நான் அல்ல நாங்கள் பசிபிகோ பாலத்தில் இறங்கினோம். சாந்தா ஃபே தெருவில் நடந்தோம். எல்லோரும் எங்களை முட்டாள் தனமாக பார்த்த படியே சென்றனர். எனக்கு அவர்களிடம் கத்தும் தருணம் ஏற்பட்டது, என்ன பார்க்கிறீர்கள் முட்டாள்களே, ஒரு மனிதன் இன்னொரு மனிதனின் தலையில் குடையால் அடிப்பதை நீங்கள் பார்த்ததே இல்லை? ஆனால் அதே சமயத்தில் எனக்கு தோன்றியது, இது போன்ற காட்சியை அவர்கள் பார்த்திருக்க மாட்டார்கள் என்று. பிறகு எங்களுக்கு பின்னால் 5 அல்லது 6 சிறுவர்கள் துரத்தினார்கள், அவர்கள் பித்தேறியவர்களாக கூச்சலிட்டபடியே துரத்தினார்கள்.
ஆனால் நான் ஒரு திட்டம் வைத்திருந்தேன். வீட்டிற்கு வந்தவுடன் அந்த மனிதர் முகத்திலடித்தாற்போல் கதவை அடித்து சாத்த வேண்டுமென்று முடிவு செய்தேன். ஆனால் அது நடக்கவில்லை. அவர் நான் என்ன செய்வேன் என்பதை முன் கூட்டியே அறிந்திருப்பார் போலும்... கதவு பிடியை இறுக்கிப் பிடித்துக் கொண்ட அவர் என்னைத்தள்ளியபடியே என்னுடன் வீடினுள் நுழைந்தார்.
அப்போது முதல் அந்த மனிதர் தனது குடையால் என் தலையை தட்டிக் கொண்டேயிருக்கிறார். அவர் தூங்கவும் இல்லை சாப்பிடவும் இல்லை. அவருடைய ஒரே நடவடிக்கை என் தலையில் குடையால் அடிப்பது மட்டுமே. நான் எது செய்தாலும் அருகில் இருந்தார். என்னுடைய அந்தரங்கமான செய்கைகளின்போதும் அவர் என்னுடனே இருந்தார். அவரது அடிகள் என்னை இரவு முழுதும் தூங்கவிடாமல் செய்துள்ளது என்று ஆரம்பத்தில் நான் நினைத்தேன், ஆனால் இப்போது அந்த அடிகள் இல்லாமல் என்னால் தூங்க முடியாது என்றே தோன்றுகிறது.
இப்போதும் எப்போதும் எங்களிடையே உறவுகள் எப்போதும் நல்ல முறையில் இருந்ததில்லை. நிறைய தருணங்களின் அவரது இந்த நடவடிக்கை ஏன் என்று பல்வேறு குரல் ஏற்றத்தாழ்வுகளில் கேட்டிருக்கிறேன். ஆனால் ஊஹூம் எந்த வித பிரயோஜனமும் இல்லை. ஒரு வார்த்தைக்கூட பேசாமல் அவர் தொடர்ந்து என் தலையில் குடையால் அடித்தவண்ணமே இருந்தார். நிறைய முறை குத்துகளுடனும்,உதைகளுடனும்- கடவுள் மன்னிப்பாராக- குடையால் அடித்தும் அவர் இந்த காரியத்தை செய்ய அனுமதித்தேன். அவர் அந்த அடிகளை ஏதோ அவரது வேலையில் ஒரு கடமை போல் ஏற்றுக் கொண்டார். இதுதான் அவரது ஆளுமையின் அரும்புதிரான அம்சம்: அதாவது தனது பணியில் அவர் கொண்டிருந்த அசைக்கமுடியாத நம்பிக்கையுடன் கூடிய முழுதும் பகைமையற்ற ஒரு தன்மை. ஏதோ உயர் அதிகாரிக்கு அடிபணியும் ஒரு ரகசிய திட்டத்தை அவர் செய்து கொண்டிருப்பதான உறுதி.
உடல் ரீதியான தேவைகள் அவருக்கு இல்லையென்றாலும், நான் அவரை அடிக்கும்போது அவருக்கு வலி ஏற்படுகிறது என்று எனக்கு தெரிகிறது. அவர் பலவீனமானவர் என்று எனக்கு தெரியும். அவருக்கு மரணம் உண்டு என்பதும் எனக்கு தெரியும். மேலும் ஒரே ஒரு துப்பாக்கி குண்டு மூலம் நான் அவரிடமிருந்து விடுபடுவேன் என்பதும் எனக்குத் தெரியும். ஆனால் அந்த தோட்டா என்னை கொல்வது சிறந்ததா அல்லது அவரை கொல்வது சிறந்ததா என்பது மட்டும் எனக்கு தெரியவில்லை. நாங்கள் இருவருமே இறந்த பிறகும் கூட அவர் என்னை தொடர்ந்து தலியில் குடையால் அடிக்கமாட்டார் என்பது கூட எனக்கு தெரியவில்லை. எப்படியிருந்தாலும் இந்த தர்க்க முறையில் அர்த்தமில்லை; நான் தற்கொலை செய்வது அல்லது அவரைக் கொலைசெய்வது என்பதற்கு துணிய மாட்டேன் என்று புரிந்து கொண்டேன்.
மாறாக சமீப காலங்களில் அந்த அடிகள் இல்லாமல் நான் உயிர் வாழ முடியாது என்ற புரிதலுக்கு வந்துள்ளேன். இப்போதெல்லாம் அடிக்கடி ஒரு உறுதியான தீமை முன்னறிகுறிக்கு ஆட்படுகிறேன். ஒரு புதிய கவலை என் ஆன்மாவை தின்று கொண்டிருக்கிறது: இந்த மனிதர், அதாவது அவர் எனக்கு அதிகமாக தேவைப்படும் வேளையில், என்னைப்பிரிவார், நான் நன்றாக தூங்குவதற்கு உதவி புரிந்த அந்த குடை அடிகளை நான் ஒரு போதும் உணரமுடியாது போய்விடும் என்ற சிந்தனையிலிருந்து இந்த கவலை முளைத்தது.
|