லண்டன் ஹீத்ரு ஸ்பேஸ் பஸ் டெர்மினலில் அபிபிரயாசையுடன் காத்திருந்தான். சுஷாவை ஏன் இன்னமும் காணோம்? வலக் கை மணிக்கடடைப் பார்த்தான். ஹைடெக் மின் கடிகாரம் பச்சை நிறத்தில் மணி 1900 என்றது. 1830க்கே வர வேண்டியவள். முப்பது நிமித தாமதத்துக்கு அப்புறமும் வரவில்லை. அயர்ச்சியுடன் ஆகாயத்தை நோக்கி அண்ணாந்தான். செயற்கை ஸாடிலைட் சூரியன் இரவைப் பகலாக்கிக் கொண்டிருந்தது.
வால் நட்சத்திரம் ஸ்விப்ட் டர்ட்டில் மோதியதில் பாதி உலகம்ட அழிந்து மீதி உலகம் மாறிவிட்டது. மனிதர்கள் பல மொழிகளைக் கற்றுக் கொண்டு விட்டார்கள். ஆனால் ஒன்றில் கூட உருப்படி இல்லை. தாய்மொழியைக் கூடத் தப்பாகப் பிரயோகிக்கிறார்கள். இப்போதெல்லாம் மனிதனை மனிதன் ஆள்வதில்லை. சாலையோர சிக்னல் முதல் சட்டசபை மசோதா வரை சகலமும் கம்ப்யூட்டர்தான். கூட்டத் கழித்தல் கணக்குக்கே கம்ப்யூட்டரை நாடிய மனிதன், தன் உடல் சோம்பலாலும் மூளைச் சோம்பலாலும் கம்ப்யூட்டரை சரணடையப் போய் - இதன் இறுதி விளைவாய் - சூப்பர் கம்ப்யூட்டர் மைத்ரா உலகை ஆள்கிறது. எல்லாம் மாறிவிட்டது. தாமதிப்பதில் மட்டும் இந்தப் பெண்கள் இத்தனை நூற்றாண்டுகளில் மாறவே இல்லை.
சுஷா எங்கே போய்த் தொலைந்தாள்? ஒரு வேளை மைத்ராவின் ஸாடிலைட் கண்களில் அகப்பட்டு... ஸ்கேன் செய்யப்பட்டு... மை குட்னஸ். நினைக்கவே பயந்தான். வெதர் கண்டிஷனரின் உபயத்தால் அந்தப் பிராந்தியம் முழுவதுமே குளிர் பதனம் செய்யப்பட்டும் கூட அவனுக்குப் பயத்தில் குப்பென்று வியர்த்தது.
டெர்மினலை ஆராய்ந்தான். அலுமினிய லிப்ட்கள். ஃபைபர் எஸ்கலேட்டர்கள். ப்ரூனோ கிரகத்திலிருந்து கொண்டு வரப்பட்ட வயலட் நிற செடிகள். காற்று நிரப்பப்பட்ட பாலியூரிதேன் சோபாக்கள். டெர்மினலை ஒட்டிய வெளிப்புறச் சாலையில் ஈதனால் வாகனங்கள். ஃபைபர் எஸ்கலேட்டரில் ஓர் அமெரிக்க (அல்லது ஐரோப்பிய?) இளம்பெண்ணும் நீக்ரோ இளைஞனும் தோளில் கைபோட்டவாறு போய்க் கொண்டிருந்தனர். எட்டத்தில் ஒரு ஜப்பானிய இளைஞன் ஒரு பாகிஸ்தானிய இளைஞியை தப்புத்தப்பாய் தடவிக் கொண்டிருந்தான். வெள்ளையன் கறுப்பியை மணக்க வேண்டும். இந்தியன் வெள்ளைக் காரியை ஆஸ்திரேலியன் பிக்மிக்காரியை. தப்பித் தவறி இந்தியன் இந்தியப் பெண்ணையோ அல்லது அமெரிக்கன் அமெரிக்கப் பெண்ணையோ மணக்கக் கூடாது. தப்பு.
வெவ்வேறு இனங்கள் கலந்தால்தான் எல்லா இனங்களின் தனித்தன்மைகள் மறையும். எல்லாம் பாகுபாடற்ற ஒரே இனமாக மாறும். அந்தப் புதிய இனம் புதுயுகம் படைக்கும் என்பது மைத்ராவின் சித்தாந்தம். எனவே இன்னாருக்கு இன்னார் ஜோடி என்பதைக் கம்ப்யூட்டர் தேர்வு செய்யும். தான் தோன்றியாக ஆளாளுக்கு துணையைத் தேர்வு செய்து கொள்ளக் கூடாது. ஆகவே, சந்தேகத்துக்கிடமின்றி காதல் முற்றிலும் தடை செய்யப்பட்டுவிட்டது.
ஆனால், கல்யாணத்துக்கு முன்னால் ஆணும் பெண்ணும் டேட்டிங் வைத்துக் கொள்ளலாம். செக்ஸ் கூட வைத்துக் கொள்ளலாம். தப்பில்லை. பசி, தூக்கம் மாதிரி செக்ஸ் ஓர் உபாதை. அதை யார் வேண்டுமானாலும் யாரிடம் வேண்டுமானாலும் தீர்த்துக் கொள்ளலாம்.
|