மௌனம். தொடர்கிறார்,
"சரி, ராஜாஜிக்கே அந்த நிலைமை. ஒவ்வொரு புத்தகம் வெளிவந்ததும் "வாசகர் செய்தி" என்கிற செய்திக் கடிதத்தை வெளியிடுவேன். அதில் புதிதாக வெளிவந்திருக்கும் புத்தகங்கள், வெளிவர இருக்கும் புத்தகங்கள் பற்றிய தகவல்கள் இருக்கும். பின்னாளில், நூலகங்களுக்காக கவிஞர் குயிலன் நடத்திய "நூலகம்" இதழை வாசகர் வட்டம் மூலமாகவே நடத்தினேன்."
"எத்தனை சந்தாதாரர்கள் சேர்ந்தார்கள்"
"தமிழ்க்கூறும் நல்லுலகில் ஒரு இரண்டாயிரம் வாசகர்கள் தமிழுக்கு கிடைக்கமாட்டார்களா? என்று நம்பினேன். ஐந்நூறு சந்தாதான் சேர்ந்தது. அப்போ நல்ல நூல்களை படிக்கிற பழக்கம் அதிகமா இல்லே."
"தமிழில் முதல்முதலா காண்ட்ராக்ட் திட்டத்தை கொண்டு வந்ததே நாங்கதான். முதல் பதிப்பை நான் வெளியிடுவேன். 10 சதவீதம் ராயல்டி கொடுப்போம். இரண்டாவது பதிப்பை ஆசிரியர் விரும்பம் போல வெளியிட்டுக்கலாம்."
"எந்தெந்த புத்தகங்களை வெளியிட்டீங்கன்னு பேசிகிட்டிருந்தோம்."
"ம்... நீல பத்மநாபனின் பள்ளி கொண்டபுரம், கிருத்திகாவின் நேற்றிருந்தோம், நரசய்யாவின் கடலோடி, ஆ. மாதவனின் புனலும் மணலும், நா. பார்த்தசாரதியின் ஆத்மாவின் ராகங்கள், எம்.வி.வி.யின் வேள்வித் தீ, கி.ரா.வின் கோபல்ல கிராமம், இப்படி.. ந. பிச்சமூர்த்தியின் முதல் கவிதைத் தொகுதி குயிலின் சுருதி, சா. கந்தசாமியின் முதல் நாவல் சாயாவனம், அ. மாதவனின் முதல் நாவல் புனலும் மணலும் இதெல்லாம் நான் வெளியிட்டதுதான். அதுவரை சிறுகதை மட்டுமே எழுதிக் கொண்டிருந்த லா.ச.ரா.வை
நாவல் எழுத வைத்தேன். சிறுகதை மட்டுமே எழுதிக் கொண்டிருந்த சுஜாதாவை அறிவியல் நூல்களை எழுதச் சொன்னேன்.
மலையாளம், தெலுங்கு, இந்தி இலக்கியங்களையெல்லாம் தமிழ் மட்டுமே படிக்கத் தெரிஞ்ச நம்ம மக்கள் படிக்கட்டுமே என்று தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டேன்."
"விலை எப்படி வைச்சீங்க."
"விலை ரொம்ப குறைவு. இந்தப் புத்தகத்துக்கு விலையை பாருங்க. நாலு ரூபாய்தான் போட்டிருக்கேன். எல்லாரும் படிக்கணும்னு ஆசைப்பட்டேன். அதான், கடை விரித்தேன் கொள்வாரில்லை கதைதான்."
"நூலகத்துக்கு புத்தகம் அனுப்பினீங்களா?"
"போய் பேசினேன். அவன் பாரத்துக்கு இவ்ளோன்னு கணக்குச் சொல்லி வாங்கிக்கிறேன்னான். விலை மதிப்பில்லாத கவிதைகள், கதைகள்னு சொன்னேன். முடியாதுன்னுட்டான். போடான்னுட்டு வந்துட்டேன். கடைசி வரை நூலகத்துக்கு புத்தகம் கொடுக்கவே இல்லை."
மௌனம். பிறகு தொடங்குகிறார்,
"அக்கறை இலக்கியம்னு இலங்கை, மலேசிய தமிழ் எழுத்தாளர்களுடைய படைப்புகளைத் தொகுததுப் போட்டேன். இலங்கைத்
தமிழர்கள் நிறைய வாங்கினார்கள் சமீபத்திலே, சாமுவேல் டத்தோ ஒரு கூட்டத்திலே சொன்னாராம், "புலம் பெயர்ந்தோர் இலக்கியம்னு இப்போதான் சொல்றீங்க. அப்பவே வாசகர் வட்டத்திலே இதுமாதிரி புத்தகங்களை போட்டுருக்காங்க"ன்னு இத்தனைக்கும் அவரை எனக்குத் தெரியாது. என்னை அவருக்குத் தெரியாது. லெஸ்டர் ப்ரஷன் ஆங்கிலத்திலே எழுதிய அறிவியல் நூலை "அறிவின் அறுவடை"னு தமிழில் போட்டேன். அதைப் படிச்சுட்டு அமெரிக்கத் தூதரே என் வீட்டுக்கு வந்து என்னிடம் கொஞ்சநேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டுப் போனார். உங்களை மாதிரியான ஆட்களும் வந்து பேசிட்டு போறீங்க. நிறைய சோதனை முயற்சிகள் செய்தேன். தொடர்ந்து செய்யத்தான் ஆசை. முடியலே. நல்ல புத்தகங்களை வெளியிட்ட மனநிறைவு இருக்கு. இது போதும்னு நினைக்கிறேன்..."
"ஒரு சந்தேகம். நீங்கதானே தமிழின் முதல் பெண் பதிப்பாளர்."
"வை.மு. கோதைநாயகி அம்மாள், அவருடைய சொந்த புத்தகங்களை அவரே வெளியிட்டார். பதிப்பகமாக நடத்தியது நான்தான்."
"உங்க உழைப்புக்கு ரொம்ப நன்றி."
"சந்தோசம்."
- சூரியசந்திரன்
|