தன்பொண்டு தன்பிள்ளை சோறு வீடு சம்பாத்யம் இவையுண்டு தானுண் டென்போன் சின்னதொரு கடுகுபோல் உள்ளங் கொண்டோன் தெருவார்க்கும் பயனற்ற சிறிய வீணன்! கன்னலடா என்சிற்றூர் என்போ னுள்ளம் கடுகுக்கு நேர்மூத்த துவரை யுள்ளம்! தொன்னையுள்ளம் ஒன்றுண்டு தனது நாட்டுச் சுதந்தரத்தால் பிறநாட்டைத் துன்பு றுத்தல்!
ஆயுதங்கள் பரிகரிப்பார், அமைதி காப்பார், அவரவர்தம் வீடுநகர் நாடு காக்க வாயடியும் கையடியும் வளரச் செய்வார் மாம்பிஞ்சி யுள்ளத்தின் பயனும் கண்டோம்! தூயஉள்ளம் அன்புள்ளம் பெரிய உள்ளம் தொல்லுலக மக்களெல்லாம் `ஒன்றே' என்னும் தாயுள்ளம் தனிலன்றோ இன்பம்! ஆங்கே சண்டையில்லை தன்னலந்தான் தீ ர்ந்த தாலே.
முன்னேறு!
சாதிமத பேதங்கள் மூடவழக் கங்கள் தாங்கிநடை பெற்றுவரும் சண்டையுல கிதனை ஊதையினில் துரும்புபோல் அலைக்கழிப்போம்; பின்னர் ஒழித்திடுவோம்; புதியதோர் உலகம் செய்வோம்! பேதமிலா அறிவுடைய அவ்வுலகத் திற்குப் பேசுசுய மரியாதை உலகுஎனப்பேர் வைப்போம்! ஈதேகாண்! சமூகமே, யாம்சொன்ன வழியில் ஏறுநீ ஏறுநீ ஏறுநீ ஏறே!
அண்டுபவர் அண்டாத வகைசெய் கின்ற அநியாயம் செய்வதெது? மதங்கள் அன்றோ! கொண்டுவிட்டோம் பேரறிவு, பெருஞ்செ யல்கள் கொழித்து விட்டோம் என்றிங்கே கூறுவார்கள், பண்டொழிந்த புத்தன், ராமா நுஜன்மு கம்மது, கிறிஸ்து-எனும் பலபேர் சொல்லிச் சண்டையிடும் அறியாமை அறிந்தா ரில்லை! சமூகமே ஏறுநீ, எம்கொள் கைக்கே!
|