கடந்த 02.11.2007 அன்று வீரச்சாவடைந்த பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட ஏழு மாவீரர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் இன்று. சிறீலங்கா அரச பயங்கரவாதத்தால் 2007 நவம்பர் 2 ஆம் திகதி வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரம் :
* பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் என்று அழைக்கப்படும் பரமு தமிழ்ச்செல்வன். (சொந்த முகவரி: யாழ். மாவட்டம், தற்காலிக முகவரி: கிளிநொச்சி மாவட்டம்)
* லெப். கேணல் அன்புமணி அல்லது அலெக்ஸ் என்று அழைக்கப்படும் முத்துக்குமாரு சௌந்தரகிருஸ்ணன் (சொந்த முகவரி யாழ். மாவட்டம்)
* மேஜர் கலையரசன் அல்லது நேதாஜி என்று அழைக்கப்படும் கருணாநிதி வசந்தகுமார் (நிலையான முகவரி: யாழ். மாவட்டம், தற்காலிக முகவரி: ஜெயந்திநகர், கிளிநொச்சி)
* லெப். ஆட்சிவேல் என்று அழைக்கப்படும் பஞ்சாட்சரம் கஜீபன் (யாழ். மாவட்டம்)
* லெப். மாவைக்குமரன் என்று அழைக்கப்படும் முத்துக்குமாருக்குருக்கள் சிறீகாயத்திரிநாத சர்மா
* மேஜர் செல்வம்.
தமிழ்மக்களின் அரசியல் சுதந்திரத்துக்காக இருபத்து மூன்று ஆண்டுகள் களத்திலும் அரசியல் தளத்திலும் பணி செய்தவர் பிரிகேடியர் சுப. தமிழ்ச்செல்வன்.
நாற்பது வயதை எட்டிய சுப.தமிழ்ச்செல்வன் அவர்கள் பதினேழாவது வயதில் ஒரு போராளியாக விடுதலை இயக்கத்தில் இணைந்து கொண்டு தனது இருபத்து நான்காவது வயதில் செயல் திறன்மிக்க விடுதலை இயக்கத்தின் அரசியல்துறைப் பொறுப்பாளர் என்ற பொறுப்பை ஏற்றதிலிருந்து அவர் மரணிக்கும் வரையான பதினான்கு ஆண்டுகளாகத் தனது பணியை செவ்வனே நிறைவேற்றியுள்ளார்.
அத்தோடு அவர் யாழ். மாவட்டத் தளபதியாக பணியாற்றிய அக்காலப் பகுதியில் வட போர்முனையின் கட்டளைப்பீடமாகத் திகழும் பலாலி முக்கூட்டுப் படைத்தளத்தின் அச்சுறுத்தலிலிருந்து போராட்டத்தின் மையத்தளமாக திகழ்ந்த யாழ்ப்பாணத்தை பாதுகாப்பதற்கான ஒரு தற்காப்புச் சமருக்கு முகங்கொடுத்த அதேவேளை இவரது தலைமையில் பல வலிந்த தாக்குதல்களும் முன்னெடுக்கப்பட்டன.
குறிப்பாக
* மன்னார் சிலாவத்துறை சிறிலங்கா படை முகாம் மீதான தாக்குதல். * ஆகாயக் கடல் வெளிச்சமரில் கடல் வழியிலான படை இறக்கத்துக்கு எதிரான சமர்.
என்பன பிரிகேடியரின் படைத்துறை ரீதியிலான செயற்பாட்டை வெளிப்படுத்தக் கூடியன.
ஆகாயக்கடல் வெளிச்சமரைப் பொறுத்த வரையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் முன்னெடுத்த முதலாவது மிகப்பெரும் மரபுவழிச் சமராக அது அமைந்ததோடு அனைத்துலக ஊடகங்களினதும், படை ஆய்வாளர்களினதும் கவனத்தை ஈர்த்த ஒரு சமராகவும் அது திகழ்ந்தது. இந்தச் சமரில் கடல் வழியிலான படை இறக்கத்துக்கு எதிரான சமருக்கு பிரிகேடியரே பொறுப்பாகச் செயற்பட்டார்.
இந்தச் சமரில் விழுப்புண்ணடையும் வரை அவர் களத்தை வழிநடத்தினார். இக்காலப் பகுதியில் கடற்புலிகளின் உருவாக்கமோ அல்லது கிட்டுப் பீரங்கிப் படையணி மற்றும் குட்டிசிறி மோட்டார் படைப்பிரிவின் உருவாக்கமோ ஏதும் இல்லையென்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில்தான் 1993ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உள்ளார்ந்த ரீதியாக ஒரு மிகப்பெரும் நெருக்கடிக்கு முகம் கொடுத்த நிலையில் தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளராக பிரிகேடியர் நியமிக்கப்பட்டார்.