மனோகர் விட்டுச் சென்ற திறனையும், மறபையும் இதோ நாங்கள் முழுமையாக காப்பாற்றியுள்ளோம் என்று கூறுவதுபோல, மிகச் சிறப்பாக நடத்திக் காட்டினர். 20 ஆண்டுகளுக்குப் பிறகு 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2 ஆம் தேதி இலங்கேஸ்வரன் மீண்டும் அரங்கேறியது. நாரத கான சபா நிரம்பி வழிய நாடகம் துவங்கியது.
நாடகத்தின் துவக்கத்திலேயே, தன்னைச் சந்தித்த நாரதரிடம், தனது மருமகனின் (ஸ்ரீ இராமனின்) பெருமையை இராவணன் கூறுவதில் தொடங்கி, முன்நிகழ்வு கூறலாக இந்நாடகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தனக்குப் பிறந்த மகளால் இலங்கைக்கு பேரழிவு ஏற்படும் என்று பிரம்மா கூற, அப்பெண் மகவை அழித்துவிடுமாறு விபீடனும், கும்பகர்ணனும் வலியுறுத்த, சீதையை ஒரு பேழையில் வைத்து கடலில் விட்டுவிடுகிறான் இராவணன்.
அந்தப் பேழை பேரரசன் ஜனகனின் ஏர்க்காலில் சிக்க, அதிலிருந்த குழந்தையை வளர்க்கின்றான் என்றாகி, அதன் பிறகு நாம் கேள்விப்பட்டப்படியே செல்லும் இராமாயணக் கதையை மிக அற்புதமாக கொண்டு செல்கின்றனர்.
குழந்தையைக் கொண்ட பேழையை மாயன் கடலில் விடுவதும், சீதையை புஷ்பக விமானத்தில் இராவணன் கொண்டு செல்வதும், தன்னை வழிமறித்த ஜடாயுவை இராவணன் வெட்டி வீழ்த்துவதும், இலங்கைக்குச் செல்ல கடலைத் தாண்ட, ஹனுமான் விஸ்வ ரூபம் எடுப்பதும் தத்ரூபமாக சித்தரிக்கின்றனர்.
இந்நாடகத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் எவ்வளவு இனிமை. கேட்டதும் புரியும் வார்த்தைகளைக் கொண்டு எழுதப்பட்ட அந்த பாடல்கள் காலத்தைக் கடந்து இனிக்கின்றன.
இலங்கேஸ்வரனின் வாழ்க்கையில் மறைந்துள்ள ரகசியத்தைப்போல, அவனது குடி மகனின் வாழ்க்கையிலும் ஒரு ரகசியம் நுழைவதையே நகைச்சுவையாக்கியுள்ளது மிக அருமை.
அன்றல்ல, இன்றல்ல... என்றென்றைக்கும் சுவை குன்றாத இதிகாசம் இராமயணம். அதைப் போலவே, இராமாயணம் இருக்கும் வரை, சிறப்புக் குன்றாமல் இலங்கேஸ்வரன் நாடகமும் மறையாமல் நடக்கும் என்பதை உறுதியுடன் புரியவைத்துள்ளனர் வி.என்.எஸ். மனோகர் நாடக மன்றத்தினர்.
ஆர்.எஸ். மனோகருடன் 35 ஆண்டுகளாக இணைந்து பணியாற்றிய ஆர். நாகராஜன் ஆக்கத்தில் குறுகிய காலத்தில் சென்னை சபாக்களில் 12 முறை அரங்கேறிவிட்டார் இலங்கேஸ்வரன்.
ஆர்.எஸ். மனோகர் தாங்கி புகழெய்திய இராவணன் வேடத்தை ஷண்முகம் சிறப்பாகச் செய்துள்ளார். ஸ்ரீ ராமர் வேடத்தை ஏற்ற கவின், லட்சுமணன் வேடமேற்ற சதீஷ் குமார், ஒரு காட்சியில் வந்தாலும் பரதனின் சோகத்தை முழுமையாக வெளிப்படுத்திய குமார், சீதையாய் நடித்த ஜெயந்தி, சிங்கியாய் நடித்த மனோகரி... பாராட்டிக் கொண்டேயிருக்கலாம்.
இந்நாடகத்தின் அரங்க அமைப்புகள் மாற்றியமைக்கப்படும்வரை மக்களை மகிழ்விக்கும் பாத்திரங்களை ஏற்ற முருகேசன், நாகராஜன் நன்கு அசத்தினர்.
இசையும், பாடலும் இன்றைக்கும் அற்புதம். தண்டபானி, சுரேந்தர் குரலினிமை நாடகத்தை அந்தக் காலகட்டத்திறகு அழைத்துச் சென்று வாழவைக்கிறது.
எத்தனை கேளிக்கைகள் வந்தாலும், கலைகள் அனைத்தும் ஊடகங்களில் சென்று முடங்கிக்கொண்டாலும், அந்த வரையறைகளுக்கு கட்டுப்படாமல் முரட்டுத்தனமாக நிமிர்ந்து நின்று தனித் தன்மையுடனும், பெருமையுடனும் என்றைக்கும் பிரகாசிக்கும் மனோகரின் நாடகங்கள். ஏனெனில் அவரின் நாடகங்கள் அற்புதங்கள்....
ஆதலால் காலத்தை தாண்டியவை!
|