நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகள் வரையறுக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிகமான அளவு உப்பு சாப்பிடுவதால், அவர்களின் இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது என்று இங்கிலாந்து விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
லண்டனில் உள்ள செயின்ட் ஜார்ஜிஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், பெற்றோர் தங்கள் குழந்தைகள் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உள்ள உப்பின் அளவு குறித்து அதிக அக்கறைச் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். அதிக அளவு உப்பு சேர்ப்பதனால் சிஸ்டாலிக் இரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஆயிரத்து 600 க்கும் மேற்பட்ட 4 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வயதுள்ள குழந்தைகள் 2 முதல் 3 கிராம் உப்பைத்தான் நாளொன்றுக்கு உட்கொள்ள வேண்டும். ஆனால் குழந்தைகள் 4.7 கிராம் அளவுக்கு உப்பு சேர்த்து வருவது ஆய்வில் தெரிய வந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
ஆய்வுக் காலத்தில் குழந்தைகள் சாப்பிடும், பருகும் உணவு மற்றும் பானங்கள், உட்கொள்ளும் உப்பின் அளவு, இரத்த அழுத்தம் ஆகியவற்றை பதிவு செய்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். உணவுத் தயாரிப்பு, உணவு மேஜையில் உள்ள உப்பை குழந்தைகள் சாப்பிடுவது எல்லாம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.
அதிக அளவில் குழந்தைகள் உப்பைச் சாப்பிட்டால் இரத்த அழுத்தம் ஏற்படும் என்றும், வரையறையிக்கு அதிகமாக சாப்பிடுத் ஒவ்வொரு கூடுதல் கிராம் உப்பும் குழந்தைகளில் சிஸ்டாலிக் இரத்த அழுத்தத்தை அதிகரிப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். குழந்தைப் பருவத்தில் உப்பை குறைவாக சாப்பிட்டால், இளமைப் பருவத்தில் இரத்த அழுத்தம் குறைவாகவே இருக்கும். மேலும் இது இருதய நோய்கள், ஸ்டோக்குகள் போன்றவை நம்மைத் தாக்காமல் இருக்கும்.
|