பள்ளித் தேர்வுகளில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக தொடர்ந்து படிக்குமாறு நச்சரிக்கும் பெற்றோரே குழந்தைகளிடம் மன அழுத்தம் அதிகரிப்பதற்குக் காரணம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
குழந்தைகளிடம் அதிகரிக்கும் மன அழுத்தம் தொடர்பாக, பிரிட்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில் வெளியான பல விவரங்கள் வல்லுநர்களுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் நல்ல தரமான தனியார் பள்ளிகளில் படிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
அதற்காக ஏராளமான பணத்தைச் செலவு செய்து குழந்தைகளை பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்புகிறார்கள். வீட்டிலும் அதிகமாகப் படிக்குமாறு குழந்தைகளை வற்புறுத்துகிறார்கள்.
மேலும் பணம் வீணாகிவிடக் கூடாதே என்ற கவலையில் பெற்றோர் தொடர்ந்து கண்டிப்புடன் நச்சரிப்பதால், குழந்தைகளின் மன அழுத்தம் இயல்பாகவே அதிகரிக்கிறது.
குறிப்பாக புதிதாகப் பள்ளியில் சேரும் 6 வயதுக் குழந்தைகள், தொடக்கப் பள்ளியில் இருந்து நடுநிலைப் பள்ளிக்குப் போகும் 11 வயதுக் குழந்தைகள் ஆகியோர் தேர்வுகளைச் சந்திக்கும் போது வெறுப்படைகின்றனர். இதனால் அவர்களின் தகுதி வளர்ச்சி பாதிக்கிறது என்று ஆய்வுத் தகவல்கள் கூறுகின்றன.
பள்ளியை விட்டு இடையிலேயே வெளியேறும் மாணவர்களைப் பற்றியும் இந்த ஆய்வு கூறுகிறது.
மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வெளியுலக வாழ்க்கை பாதுகாப்பற்றது, ஆபத்தானது என்ற எதிர்மறை எண்ணங்கள் ஏற்படுகிறது. அவர்களின் குடும்பச் சூழலும் இதற்குக் காரணம்.
இதன் விளைவாக, துப்பாக்கி கலாச்சாரம் பெருகுகிறது. எல்லாமே பணம்தான் என்று எணணும் சிறுவர்கள் வன்முறைகளில் ஈடுபடுகின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற இந்த ஆய்வில் 750 குழந்தைகள், அவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள், அதிகாரிகள் விசாரிக்கப்பட்டனர்.
|