நலமுடன் வாழ... நடந்தால் போதும்!
இரத்த அழுத்தம், நீரிழிவு, இதயக் கோளாறு, கை, கால் முட்டி பிரச்சனைகள், மன அழுத்தம் ஆகியவற்றை நெருங்கவிடாமல் தடுப்பதற்கு நடையே சிறந்த பயிற்சி என்று அமெரிக்காவின் ஆய்வில் உறுதியாகியுள்ளது!
உடம்பு, சதை கூடுதல், கொழுப்பு அதிகரிப்பு ஆகியவற்றை கட்டுப்படுத்துவது தொடர்பான மருத்துவத்தில் நிபுணரான விஞ்ஞானி ஜேம்ஸ் லீவைன், "உடல் நலத்தைக் காக்க நடந்தால் போதும், பயிற்சி சாலைகளுக்குச் செல்லத் தேவையில்லை. உங்களுடைய நாடித் துடிப்பை சோதிக்கத் தேவையில்லை. தொலைக்காட்சி பார்ப்பதை நிறுத்திவிட்டு, சோபாவில் இருந்து எழுந்து சற்று நேரம் நடந்துவிட்டு வாருங்கள். எல்லாம் சரியாகிவிடும்" என்று கூறியுள்ளார்.
ஜப்பானில் மாக்சு மாட்டோ நகரில் உள்ள ஷின்ஷு பல்கலையின் மருத்துவ மாணவர்கள் நடத்திய ஆய்வில் இது உறுதியாகியுள்ளது என்று கூறியுள்ள மருத்துவர் லீவைன், வயதானவர்கள் வேகமாக நடப்பதால் உயர் ரத்த அழுத்தத்தில் இருந்து தங்களை முழுமையாக பாதுகாத்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
246 பேரை 5 மாதங்கள் தொடர்ந்து ஆய்வு செய்தபோது அதில் கண்டறியப்பட்ட உண்மைகளின் அடிப்படையில் லீவைன் இதனைக் கூறியுள்ளார். இந்த 246 பேரில் நடப்பவர்கள், வேகமாக நடப்பவர்கள், நடக்காதவர்கள் எல்லோருமே அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
வேகமாக நடந்து பயிற்சி செய்பவர்களின் உடல் நலம் நன்கு முன்னேற்றம் அடைவதாகக் கூறியுள்ள வாஷிங்டனைச் சேர்ந்த மருத்துவர் லீவைன், நடத்தலே எல்லா வயதினருக்கும் உகந்த மதிப்பு வாய்ந்த பயிற்சி என்று கூறியுள்ளார். (ஏ.என்.ஐ.)
|