சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனில் நடந்த பன்றிக் காய்ச்சல் விழிப்புணர்வு கருத்தரங்கில் கலந்து கொண்ட மருத்துவர் இளங்கோ, பன்றிக் காய்ச்சல் நோய் குறித்து வீடியோ காட்சியை திரையிட்டு காண்பித்தார்.
பின்னர் அவர் பேசுகையில், பன்றிக்காய்ச்சல் என்றழைக்கப்படும் காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என்று அழைக்கப்படுகிறது. அதில் 3 வகை உள்ளது. இவை அனைத்தும் வைரஸ்களால் ஏற்படுகிறது. இந்த வைரஸ் தனது ஆர்.என்.ஏ. என்கிற உருவ அமைப்பை அடிக்கடி மாற்றிக்கொள்கிறது. அதனால் இது ஏ.பி.சி. என்று 3 வகைப்படுகிறது.
ஏ டைப் வைரஸ் தொற்றினால் லேசான காய்ச்சல் இருக்கும். சளி, இருமல் , தலைவலி, வயிற்றோட்டம் வாந்தி ஆகியவை இருக்கும். சிலருக்கு வயிற்றோட்டம் வாந்தி இருக்காது. இந்த நோய் வந்தவர்களை தனிமை படுத்தி சாதாரண வைரஸ் காய்ச்சலுக்கு உரிய சிகிச்சை அளித்தால் போதும். இவர்களுக்கு டாமிபுளு (ஒசல்டாமிவிர்) மாத்திரை கொடுக்கக்கூடாது. ஏன் என்றால் அவ்வாறு அந்த மாத்திரை கொடுத்தால் அது பின்விளைவை ஏற்படுத்தும்.
இவர்களுக்கு ஆய்வக பரிசோதனை தேவை இல்லை. வீட்டில் ஓய்வு எடுத்து கொள்ளும்படியும் மற்ற நபர்களிடம் தொடர்பை குறைத்துக் கொள்ளச் செய்ய வேண்டும்.
பி டைப் நோயாளிகளுக்கு ஏ டைப் நோயாளிகளுக்கு இருந்த அனைத்து அறிகுறிகளுடன் காய்ச்சல் அதிகமாக இருக்கும். தொண்டை வலி அதிகமாக இருக்கும். இவர்களுக்கும் ஆய்வக பரிசோதனை தேவை இல்லை. ஆனால் பிடைப் நோயாளிகளுக்கு உடனடியாக டாமி புளு மாத்திரை கொடுக்கவேண்டும்.
சி டைப் நோயாளிகளுக்கு பி டைப் நோயாளிகளுக்கு இருந்த அறிகுறி தவிர வழக்கத்தை விட அதிக மூச்சுத்திணறல் ஏற்படும். ரத்தத்துடன் கலந்த சளிவரும். நகம் நீல நிறமாக மாறும். சாப்பிட மனம் வராது. பசி எடுக்காது. உடனே ஆய்வக பரிசோதனை செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும். டாமி புளு மாத்திரை சாப்பிடவேண்டும் என்று கூறினார்.
பிறகு பேசிய மருத்துவ இயக்குனர் மருத்துவர் சி.ராஜேந்திரன், பன்றிக்காய்ச்சலை பரப்பும் வைரஸ் கைகுட்டையில் 12 மணிநேரமும், கைளில் 5 நிமிடமும், குளிர்ந்த தண்ணீரில் 30 நாட்களும் உயிர்வாழக்கூடியது என்றார். மேலும் இந்த வைரஸ் பரவாமல் இருக்க இருமும்போதும், தும்மும் போதும் மற்றவர்களுக்கு குறைந்தது 4 அடி இடைவெளி இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.