ஒரு நிமிடம் தைரியம் இருந்தால் தற்கொலை செய்து கொள்ளலாம். ஆனால் ஒவ்வொரு நிமிடமும் தைரியம் இருந்தால் தான் வாழ முடியும் என்பது வாக்கு.
தற்போது எங்கு பார்த்தாலும் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. இதற்குக் காரணம் பலவாக இருக்கலாம். ஆனால் தற்கொலை செய்து கொண்டு இறக்கும் ஒருவரது பிரச்சினை இந்த உலகத்தில் எத்தனையோ பேருக்கு இருக்கிறது. அவர்கள் எல்லாம் தற்கொலைதான் செய்து கொள்ள வேண்டும் என்றால் உடல்களை எடுத்துப் போடக் கூட ஆள் இருக்காதல்லவா.
தற்கொலை என்பது தனிப்பட்ட ஒருவரது மனநிலையைப் பொறுத்தது. மன இறுக்கம், பிரச்சினை, தோல்வி, நம்பிக்கையின்மை, ஏமாற்றம் போன்ற பல பிரச்சினைகளுக்காக தற்கொலைகள் நடக்கின்றன.
ஒரு மனிதனின் வாழ்க்கையில் ஏதேனும் ஒன்று தவறாக நடக்கும்போது மனம் வெறுத்து தற்கொலை செய்து கொள்கிறான். தற்கொலைக்கு வயது, பொறுப்புகள், ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன் என்ற பேதமெல்லாம் இல்லை. மனநிலை ஒன்று மட்டுமே காரணமாகிறது.
தற்கொலை செய்ய முயன்றவர்களில் 30 விழுக்காட்டில் இருந்து 70 விழுக்காட்டினர் மனநிலை அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது. மனநிலை அழுத்த நோய் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் எடுத்துக் கொள்ளும் மது அல்லது வேறு வகையான போதைப் பொருட்கள் தற்கொலையை தூண்டும் ஒரு கருவியாக அமைந்துவிடுகிறது.
மனநிலை தடுமாற்றம், மன அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தற்கொலை செய்து கொள்வார்கள் என்று கூற முடியாது. ஆனால் அதே சமயம் அவர்களுக்கு நமது உதவி தேவைப்படுகிறது என்று கூறலாம்.
|