செயற்கை ரத்தம், தோல் உருவாக்க முயற்சியில் இங்கிலாந்து விஞ்ஞானிகள்
செவ்வாய், 24 நவம்பர் 2009( 11:26 IST )
விபத்து மற்றும் பல்வேறு நோய்களினால் தாக்கப்பட்ட மனிதனுக்கு மிகவும் அவசியமாகும் மனித உறுப்புகளான தோல், ரத்தம், எலும்பு ஆகியவற்றை, உடல் பாகங்களை அமைக்க உதவும் திசுக்களைக் கொண்டு செயற்கையாக உருவாக்கும் முயற்சியில் இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானிகள் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
எனவே இப்படி உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக ரத்தம், தோல், எலும்பு ஆகியவற்றை செயற்கையாக உருவாக்குவதற்கான முயற்சியில் இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானிகள் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
லண்டனில் உள்ள பல்கலைக்கழக கல்லூரியில் ராபர்ட் பிரவுன் தலைமையிலான விஞ்ஞானிகள் இது தொடர்பான ஆராய்ச்சியை மேற்கொண்டு இருக்கிறார்கள். மனித உடல் எடையில் 25 சதவீதம் கல்லகன் என்ற புரதச்சத்து நிறைந்து உள்ளது. இதில் இருந்து தண்ணீரை எடுத்து அதன் மூலம் மனித உடல் திசுக்களை உற்பத்தி செய்யும் வழிமுறையை அந்த விஞ்ஞானிகள் உருவாக்கி இருக்கிறார்கள்.
இந்த திசுக்களில் ஒரு பகுதியை கொண்டு தான் தோல், எலும்பு, விழி வெண் படலம் ஆகியவை உருவாகின்றன.
தோல், ரத்தம், எலும்பு விழி வெண்படலம் ஆகியவற்றை உருவாக்குவதற்கான முயற்சியில் விஞ்ஞானிகள் வெற்றி அடைந்து வருகிறார்கள். இந்த பாகங்கள் இன்னும் ஒரு ஆண்டு காலத்தில் மருத்துவரீதியான பரிசோதனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திசுக்களை தயாரிப்பதற்கான கருவி சிறிய அளவில் மேஜையில் வைத்து கொள்ளக்கூடிய அளவிலேயே இருக்கும். இதன் மூலம் உடல் உதிரிப்பாகங்களை சில நிமிடங்களில் தயாரிக்க முடியும். இந்த உற்பத்தியில் கேம்பிரிட்ஜ்ஜில் உள்ள ஆட்டோமேஷன் பார்ட்னர்ஷிப் என்ற நிறுவனம் ஈடுபட்டு உள்ளது.