சென்னையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பலரையும் தாக்கி பெரும் பாதிப்புக்குள்ளாக்கிய சிக்குன் குனியா காய்ச்சல் தற்போது மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது.
தற்போது எங்கு பார்த்தாலும், காய்ச்சலும், காய்ச்சல் கண்டவர்களுக்கு, கடுமையான உடல் வலியும் ஏற்படுகிறது. இதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிறப்புப் பிரிவுகள் துவக்கப்பட்டுள்ளன.
கடந்த 2005ஆம் ஆண்டு சென்னையில் சிக்குன் குனியா எனப்படும் பறவைக் காய்ச்சல் நோய் பரவியது. அந்த ஆண்டில் இந்தியாவில் மட்டும் இந்த நோய் சுமார் 12 1/2 லட்சம் பேரை பாதித்தது. ஏடிஸ் என்று சொல்லப்படுகின்ற ஒருவகை கொசு மூலம் பரவிய சிக்குன்குனியா நோயால் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். இதில் குழந்தைகளும் அடங்குவர். கை, கால்களில் வீக்கம், நடக்க முடியாத நிலை, கடுமையான காய்ச்சல் என்று மக்களை வாட்டி எடுத்தது சிக்குன் குனியா. இந்த நோயின் பெயரைச் சொன்னாலே நடுங்கும் அளவிற்கு அந்த நோயின் தாக்கம் இருந்தது.
தமிழகத்தின் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னையில் பெய்து வரும் மழை காரணமாக ஏராளமான இடங்களில் மழைநீர் தேங்கி, அதன் மூலம் கொசுக்கள் உற்பத்தியாகி, நோய் பரவும் நிலை உருவாகி உள்ளது.
இதனால், சென்னையில் பல்வேறு பகுதிகளில் சிக்குன் குனியா நோய் பரவ தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதில், பாதிப்படைந்த ஏராளமானோர் பல்வேறு மருத்துமனைகளுக்குச் சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கூடுதலாக, சிகிச்சை அளிப்பதற்கு வசதியாக புதிய பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.
சிக்குன் குனியா வராமல் தடுக்க வீடுகளின் முன்பு தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். வீட்டில் தண்ணீர் சேமிப்பான்களை மூடிகளைப் போட்டு மூடி வைக்க வேண்டும். திறந்த நிலையில் நீர் நிலைகள் இருக்க வேண்டாம். வீட்டில் உள்ள சமையல் அறையை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். பாத்திரங்களை மூடி வைக்க வேண்டும் இது போன்ற நடவடிக்கையில் பொதுமக்கள் ஈடுபட்டாலே சிக்குன்குனியா நோயில் இருந்து தப்பிக்கலாம் என்று எச்சரிக்கிறார் சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி.
சிக்குன் குனியா நோயின் அறிகுறிகள்
கடுமையான காய்ச்சல், அதை தொடர்ந்து உடலில் வலி ஏற்படும்.
காய்ச்சலுடன் சேர்த்து கை, கால், வரல் மூட்டுக்களில் வீக்கத்துடன் கூடிய வலி ஏற்படும்.
வலியினால் நடக்க முடியாத நிலை ஏற்படும்.
சிலருக்கு குளிரும், தலைவலி, வாந்தியும் கூட ஏற்படலாம்.
குழந்தைகளில் சிலருக்கு நரம்பு மண்டல கோளாறு உருவாகும்.
இதுபோன்ற அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.
நோய் கண்டவர்கள் சிகிச்சையுடன் நன்றாக ஓய்வு எடுப்பதும் அவசியம்.
இது குறித்து சென்னை அரசு மருத்துவமனை மருத்துவர் கூறுகையில், "சிக்குன் குனியா நோய்க்கு மருந்தோ, தடுப்பூசியோ கிடையாது. காய்ச்சல் மற்றும் வலிகளை குறைக்கும் மருந்து மாத்திரைகள் மட்டும் தான் கொடுக்கப்பட்டு வருகின்றன. மருந்து மாத்திரைகள் போதிய அளவில் இருப்பில் வைக்கப்பட்டு உள்ளன. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கூடுதலாக மருத்துவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்'' என்றார்.