இதயத்தில் பல்வேறு குறைபாடுகளுடன் பிறந்த நைஜீரிய நாட்டைச் சேர்ந்த 4 மாதக் குழந்தைக்கு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அந்த குழந்தை நலமடைந்து தாய்நாடு திரும்புகிறது.
நைஜீரியாவில் உள்ள அபுஜா நகரைச்சேர்ந்த யுஸோக்வு சுக்மிகா - லவுன்மி தம்பதிகளுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அழகான பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு ஒடினா கனாமி என்று பெயரிட்டனர். குழந்தை பிறந்ததில் இருந்தே மூச்சு விட திணறியது.
அதனால் குழந்தையின் இதயத்தை பரிசோதித்துப் பார்த்ததில், இதயத்தில் 2 பெரிய துவாரங்கள் இருந்ததால், ரத்தக் கசிவும், இதயத்தின் வால்வுகள் செயல்படாமல் இருந்ததும் தெரிய வந்தது. இதன் காரணமாக நுரையீரலுக்கு அதிக ரத்தம் பாய்ந்து, ரத்த அழுத்தம் அதிகரித்தது. குழந்தை மூச்சுவிட திணறியது. இப்படி இதயத்தில் பல பிரச்சினைகள் 5 ஆயிரம் குழந்தைகளில் ஒருவருக்குதான் வரும்
இந்த பிரச்சினைக்கு தீர்வு காண ஒரே வழி அறுவை சிகிச்சை தான் என்றபோதிலும், கைக்குழந்தையாக இருக்கிறதே என்ற கலக்கத்தில் ஆழ்ந்தனர் பெற்றோர். இணையம் வழியாக சென்னை அப்பல்லோ மருத்துவமனை பற்றி தகவல் அறிந்து குழந்தையை சென்னைக்குக் கொண்டு வந்தனர்.
குழந்தைக்கு உடனடியாக 3டி எக்கோ எடுத்து கோளாறுகளைப் பற்றி தெளிவாகத் தெரிந்து கொண்ட பின்னர் அறுவை சிகிச்சைக்கு திட்டமிடப்பட்டது.
மருத்துவர சாலமன், இதய அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் முத்துக்குமார் உள்ளிட்ட மருத்துவக் குழு, நைஜீரியக் குழந்தைக்கு 4 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து கோளாறுகளை செரி செய்தனர்.
அறுவை சிகிச்சைக்குப்பின் அந்த குழந்தையின் ரத்த அழுத்தம் சீராக இருந்தது. இருதயம் நன்றாக இயங்கியது. மூச்சுதிணறல் நீங்கி எளிதாக சுவாசிக்கிறது.
தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்த குழந்தை முழு உடல் நலம் அடைந்ததால், குழந்தையும் தாயும் இன்று அவர்களின் நாட்டுக்கு திரும்புகிறார்கள். தொடர்ந்து மின்னஞ்சல் வழியாக குழந்தையின் நலனை மருத்துவர்கள் அறிந்து வருவார்கள். ஓராண்டு கழித்து மீண்டும் குழந்தை இந்தியாவிற்கு வந்து மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குழந்தையின் தாய் கூறுகையில், என்னுடைய குழந்தைக்கு இப்படி ஒரு நோய் இருக்கிறது என்று அறிந்ததில் இருந்து அழுது கொண்டே இருந்தேன். தற்போது அந்த கண்ணீர் ஆனந்தக் கண்ணீராக மாறியுள்ளது. இந்தியாவிற்கும், அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கும் என மனமார்ந்த நன்றிகள் என்று கூறினார். |