ஏமன் நாட்டு விமானம் கடலில் விழுந்து நொறுங்கிய விபத்தில் உயிர் தப்பியது சிறுவன் அல்ல 14 வயது சிறுமி. இவள் உயிர் பிழைத்ததே அதிசயமாக உள்ளது.
காமரோஸ் தீவு அருகே கடந்த செவ்வாய்க் கிழமை ஏமன் நாட்டு விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது. பிரான்ஸ் விமான விபத்தில் இருந்தே மீளாத நிலையில் மற்றொரு விமான விபத்து. ரயில் விபத்து என்றால் எத்தனை பேர் பலி, எத்தனை பேர் காயம் என்று சொல்லலாம். விமான விபத்து என்றால் பயணிகள் பட்டியல் முழுவதையுமே பலியானவர்களின் பட்டியலில் அல்லவா சேர்க்க வேண்டும்.
ஏமன் நாட்டு விமானத்தில் பயணம் செய்த 152 பேர் பலியானார்கள். ஆனால், இந்த விபத்தில் 14 வயது சிறுமி ஒருத்தி அதிசயமாக உயிர் பிழைத்தாள். அவள் பெயர் பகரி பகியா. விமான விபத்து குறித்து தகவல் அறிந்ததும், உடனடியாக விரைந்த மீட்புக் குழுவினர், கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த பகியாவை மீட்டுள்ளனர். இதனை காமரோஸ் நாட்டு துணை அதிபர் இடி நாதோய்ம் தெரிவித்துள்ளார்.
விபத்தில் சிக்கிய பகியாவின் கழுத்து எலும்பு முறிந்துள்ளது. முகத்திலும், உடலிலும் லேசான காயங்களும் உள்ளன. மற்றபடி அவரது உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று பகியாவிற்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
பகியா, விபத்தில் சிக்கிய அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை. அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது அவளது முகம். |