பன்றிக் காய்ச்சல் நோயால் 112 நாடுகளை சேர்ந்த 59,814 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 263 பேர் பலியாகி இருப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய பத்திரிகை அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை கண்காணிக்க 22 சர்வதேச விமான நிலையங்களில் மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. 224 மருத்துவர்கள் மற்றும் 112 மருத்துவ உதவியாளர்கள் கொண்ட மருத்துவக் குழு, தொடர்ந்து இந்த பணியில் ஈடுபட்டு வருகிறது.
கடந்த 27ம் தேதி மொத்தம் 51,648 பயணிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில், 39,181 பேர் பன்றிக் காய்ச்சல் பாதிப்புள்ள நாடுகளில் இருந்து வந்தவர்கள். இதுவரை, 25 லட்சத்து, 33 ஆயிரத்து 934 பயணிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றைய பரிசோதனையில் குர்கான், கோல்கத்தா மற்றும் மும்பை நகரங்களில் தலா ஒருவர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அமெரிக்காவிலிருந்து ஹைதராபாத் திரும்பிய 10 வயது சிறுவனும் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளான். இவர்கள் அனைவருக்கும் மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பன்றிக் காய்ச்சல் நோய் பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பரிசோதனை செய்யப்பட்ட 676 பயணிகளில் 93 பேருக்கு பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இவர்கள் அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு, 61 பேர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர் |