தமிழக அரசு மருத்துவமனைகளில் நல்ல அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் 60 வயதில் ஓய்வு பெற்று சென்றுவிடுவதால் அவர்களின் திறமையை இழந்து விடுகிறோம். இதனால் மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக உயர்த்த வேண்டும் என்று மருத்துவர் அன்புமணி ராமதாஸ், தமிழக முதலமைச்சர் கருணாநிதிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து கருணாநிதிக்கு அன்புமணி எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் மேம்பட்டு, பல்வேறு நல்வாழ்வு குறியீடுகளில் தமிழகம் முன்னணி மாநிலமாக விளங்குவதற்கு முக்கிய காரணம் மருத்துவ துறையில் பணியாற்றுகின்ற நமது மருத்துவர்கள் என்பது உண்மை.
இதனை அங்கீகரிக்கும் வகையில் தான் மாநில அரசு மருத்துவர்களுக்கு மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையாக ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்றும் ஓய்வு பெறும் வயதை 65 ஆக உயர்த்த வேண்டும் என்றும் கடந்த ஆண்டு நடைபெற்ற சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் குறித்த மத்திய கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து மாநில சுகாதார அமைச்சர்களாலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
அந்த வகையில், தமிழக அரசு மருத்துவர்களுக்கு, மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்படும் என்று மத்திய அரசு அதன் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவித்த உடனேயே நீங்கள் அறிவிப்பு செய்திருக்கிறீர்கள். நானும் ஒரு மருத்துவர் என்ற முறையில் இதற்காக, உங்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
மருத்துவர்களை பொறுத்தவரையில் வயது உயர உயர அவர்கள் அனுபவம் மிக்கவர்களாகவும், திறமை மிக்கவர்களாகவும் மாறுகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. இதனை கருத்தில் கொண்டு தான் மத்திய அரசு மருத்துவர்களுக்கு ஓய்வு பெறும் வயது 65 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
ஆனால், நமது மாநிலத்தில் மருத்துவர்ககளின் ஓய்வு பெறும் வயது 58 என்ற அளவில் இருக்கிறது. இதனால், அனுபவம் மிக்க, திறமையான மருத்துவர்களின் சேவையை அவர்களது வாழ்வில் சிறந்த நேரத்தில் நாம் இழந்து வருகிறோம். இதைக் கருத்தில் கொண்டு மருத்துவர்களின் சிறப்பான சேவை மக்களுக்கு கிடைக்கும் வகையில் அவர்களது ஓய்வு பெறும் வயதை மத்திய அரசைப்போல 65 ஆக உயர்த்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழக மக்களின் நல்வாழ்வில் அக்கறை கொண்டு விடுக்கப்பட்டுள்ள இந்த வேண்டுகோள் மீது நல்ல முடிவுகளை மேற்கொள்வீர்கள் என்றும் இப்போது, நடைபெறுகிற சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே அதற்கான அறிவிப்புகளை வெளியிடுவீர்கள் என்றும் நம்பிக்கையோடு இந்த கடிதத்தை எழுதுகிறேன் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
|