சென்னை மத்திய சிறைச்சாலை இருந்த இடத்தில் ரூ.400 கோடி செலவில் மிகப்பெரிய அளவில் ரத்த வங்கியும், ரூ.70 கோடியில் அரசு பொது மருத்துவமனை வெளிநோயாளிகள் வளாகமும் அமைக்கப்படவுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று சட்டசபையில் தெரிவித்தார்.
சட்டசபையில் நேற்று அவர் பேசுகையில், சென்னை மத்திய சிறைச்சாலை வளாகத்தில் ரூ.400 கோடி செலவில் மத்திய அரசின் உதவியுடன் நவீன வசதிகளுடன் மிகப் பெரிய ரத்த வங்கி அமைக்கப்படும். 101 மேம்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரத்த சேமிப்பு மையங்கள் ரூ.4.37 கோடி செலவில் அமைக்கப்படும்.
ரூ.3.41 கோடியில் சென்னையிலுள்ள எழும்பூர், தாய் சேய் நல மருத்துவமனை, குழந்தைகள் நல மருத்துவமனை, கஸ்தூரிபாய் காந்தி தாய்-சேய் நல மருத்துவமனை, ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம் ஆகிய 4 மருத்துவமனைகளிலும் கணினி வசதிகள் ஏற்படுத்தப்படும். மேலும் எல்லா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளையும் இணைத்து எல்லா நோயாளிகளுக்கும் சிறந்த சிகிச்சை அளிப்பதற்காக ரூ.2.27 கோடி செலவில் டெலிமெடிசன் வசதியும் எற்படுத்தப்படும்.
சென்னை கீழ்பாக்கம் மனநல மருத்துவமனை ரூ.30 கோடி செலவில் தேசிய மனநல சுகாதார திட்டத்தின் உதவியுடன் சிறப்பு மையமாக அமைக்கப்படும்.
நடப்பு ஆண்டில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.5 கோடி செலவில் புதிய எம்.ஆர்.ஐ. கருவியும், சென்னை அரசு பொது மருத்துவமனையில் ரூ.4 கோடி செலவில் புதிய கேத் லேப் (கத்திட்டர் லேப்), கருவியும் நிறுவப்படும்.
இணைய தள வழி சுகாதாரம் மற்றும் மருத்துவ தகவல் மேலாண்மை திட்டம் தற்போது தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர், சோளிங்கர், குளச்சல் மற்றும் பத்மநாபபுரம் ஆகிய 5 மருத்துவமனைகளில் முன்னோடி திட்டமாக செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் ரூ.8 கோடி செலவில் இவ்வாண்டு தருமபுரி, கிருஷ்ணகிரி, தேனி, கன்னியாகுமரி மற்றும் புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் 43 அரசு மருத்துவமனைகளில் செயல்படுத்தப்படும். மேலும் எஞ்சியுள்ள 222 அரசு மருத்துவமனைகளில் உலக வங்கி நிதி உதவி பெற்று படிப்படியாக செயல்படுத்தப்படும்.
ஒருங்கிணைந்த மருந்தாளுநர் மற்றும் நர்சிங் பட்டயப்படிப்பின் தரத்தை உயர்த்த சென்னை அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவ கல்லூரி மற்றும் பாளையங்கோட்டை சித்த மருத்துவ கல்லூரிகளில் ரூ.3.5 கோடி செலவில் புதிய கட்டிடங்கள் கட்டப்படும்.
15 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளைத் தாக்கும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் நோயை கட்டுபடுத்த திருவண்ணாமலை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ரூ.1.17 கோடி செலவில் தடுப்பூசிகள் போடப்படும்.
காது கேளாமை குறைபாடுகளை களையும் திட்டம் தற்போது வேலூர், விழுப்புரம், தஞ்சாவூர் மாவட்டங்களில் முன்மாதிரி திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் ரூ.10.4 கோடி செலவில் மேலும் 16 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.
தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ. 9 கோடியில் அல்ட்ரா சோனோகிராம், செமி ஆட்டோ அனலைசர் போன்ற நவீன மருத்துவக் கருவிகள் வழங்கப்படும்.
காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர், திருப்பூர், உதகமண்டலம், திண்டுக்கல், புதுக்கோட்டை மற்றும் கும்பகோணம் ஆகிய 8 அரசு தலைமை மருத்துவமனைகளுக்கு ரூ.2.4 கோடியில் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவிகள் நிறுவப்படும்.
ரூ.1.8 கோடியில் இருதய செயலிழப்பு நோயாளிகளுக்கு இருதய துடிப்பை அதிகரிக்க செய்யும் அதி நவீன கருவியான `இசிசிபி', சென்னை, மதுரை, கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கு வழங்கப்படவுள்ளது.
சென்னை அரசு பொது மருத்துவமனையின் விரிவாக்கத்துக்காக மத்திய சிறைச்சாலைக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் ரூ.70 கோடி செலவில் மிகப்பெரிய வெளி நோயாளிகள் வளாகம் கட்டப்படும் என்று கூறினார்.
|