பழங்கள், காய்கறிகளை அதிகம் சாப்பிடுவதால், அவற்றில் காணப்படும் குவர்சடின் (quercetin) எனும் வேதிப்பொருள் நமது உடலில் `ஃப்ளூ' போன்ற தொற்றுநோய்கள் ஏற்படும் வாய்ப்புகளைக் குறைப்பதோடு, மன அழுத்தத்தை தாங்கக்கூடிய சக்தியையும் அளிப்பதாகத் தெரிய வந்துள்ளது.
தடகள வீரர்கள், ராணுவத்தினர் உள்ளிட்ட படையினர் கடுமையான பயிற்சியில் ஈடுபடும் போது இந்த வேதிப்பொருள், அவர்களின் உடலுக்கு தாங்கும் திறனைக் கொடுப்பது தெரியவந்துள்ளது.
தெற்குக் கரோலினா, ஜே.டி.கங்கமி பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள் எலிகளை வைத்து நடத்திய ஆய்வின் மூலம் இத்தகவல் தெரிய வந்துள்ளது.
திராட்சை உள்ளிட்ட பல்வேறு வகை பழங்களிலும், சிவப்பு வெங்காயம் மற்றும் காய்கறிகளிலும், தேநீரிலும் குவர்சடின் வேதிப்பொருள் காணப்படுகிறது.
இந்த வேதிப்பொருளில் வைரஸ் எதிர்ப்பு தன்மை இருப்பது எலிகளின் செல் கல்சர் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. குறிப்பாக ஃப்ளூ நோய் எதிர்ப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எலிகளை வைத்து நடத்தப்பட்ட சோதனையின் அடிப்படையில் குவர்சடின் வேதிப்பொருள் மனிதர்களுக்கும் செயல்படக்கூடியது என்பதால், பழங்கள்-காய்கறிகளை அதிக அளவில் சாப்பிடுவோருக்கு நோய்த் தாக்குதல் குறைவு என்று தெரிய வந்துள்ளது.
எலிகளை தீவிர சோதனைக்குட்படுத்தி, அவற்றை குவர்சடின் உள்ள பொருட்களை உணவாகக் கொடுத்து ஒரு பிரிவாகவும், குவர்சடின் இடம்பெறாத உணவுப் பொருட்களைக் கொடுத்து வேறு ஒரு பிரிவாகவும் பிரித்து சோதிக்கப்பட்டது.
அந்த எலிகள் அனைத்தும் ஹெச்1என்1 வைரஸ் செலுத்துதலுக்கு உட்படுத்தப்பட்டு சோதித்துப் பார்க்கப்பட்டன. இதில் குவர்சடின் வேதிப்பொருள் கொண்ட உணவைச் சாப்பிட்டதுடன் கடுமையான உடற்பயிற்சிக்கு உட்படுத்தப்பட்ட எலிகளுக்கு வைரஸ் நோய் தாக்குதல் குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
|