உங்கள் உடலை கச்சிதமாக்க... தேவையற்ற சதைகளைக் குறைக்க என்று விளம்பரம் தந்தாலே போதும் அவர்களை காவல்துறை விரைந்து வந்து கைது செய்யும்.
இந்த செய்தி எங்கு தெரியுமா? பிரான்ஸ் நாட்டில் தான்.
அந்நாட்டில்தான், பத்திரிக்கைகள், இணையதளங்கள் மற்றும் இதர ஊடகங்கள் மூலம், "தேவையற்ற தசைகளைக் குறைக்க" என்று விளம்பரம் தருவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.
இந்த அதிரடி நடவடிக்கைக்கு காரணம், பிரான்ஸ் நாட்டில் 40,000க்கும் மேற்பட்ட பெண்கள் பசியின்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதுதான்.
பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம் தாக்கல் செய்யப்பட உள்ள இந்த சட்ட மசோதாவில், ஒஒருவரை உடலை இளைக்க தூண்டி, அதன் மூலம் அவருக்கு பசியின்மை வியாதி ஏற்பட்டு இறப்பு நேர்ந்தால், தூண்டியவருக்கு 3 வருட சிறை தண்டனையும், 36,000 பவுண்ட் அபராதமும் விதிக்கப்படும்.
மேலும், உடலை இளைக்கத் தூண்டினால் மட்டுமே 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படும் என்று சட்ட மசோதாவில் கூறப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவிலும் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பது என்ற பெயரால், பலர் சரியாக உணவு சாப்பிடாமல் இருக்கும் பழக்கம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக பருவ வயது வந்த இளம் பெண்கள் பட்டினியாய் இருப்பது என்ற புதிய நாகரிகத்திற்கு அடிமையாகி வருகின்றனர்.
இவர்கள் மூன்று வேளைக்கும் சாப்பிடுவதில்லை. அப்படியே சாப்பிட்டாலும் சம்பிரதாயத்திற்காக ஏதோ சிறிது கொரிக்கின்றனர். சினிமா நடிகைகள், பல விளம்பரங்களில் வரும் அழகு தேவதைகளின் படங்களை பார்த்துவிட்டு, அந்த மயக்கத்தில் விரதம் (பட்டினி) கிடக்கின்றனர். இதன் ஆபத்தை உணர்வதில்லை.
|