அமெரிக்காவின் ஃப்ளோரிடா மருத்துவமனையில் இயங்கிவரும் பன்னாட்டு ரோபாட்டிக் மையத்தின் இயக்குனராக இந்தியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பெருஞ்சுரப்பி அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக நடத்தியுள்ள இந்தியாவைச் சேர்ந்த மருத்துவர் விபுல் பட்டேல், அமெரிக்காவின் ஃப்ளோரிடா மருத்துவமனை பன்னாட்டு ரோபாட்டிக் மையத்தின் இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார். மேலும் மத்திய ஃப்ளோரிடா பல்கலைக் கழகத்துக்கு உட்பட்ட மருத்துவ கல்லூரியில் உள்ள சிறுநீரகவியல் துறையின் இணைப் பேராசிரியராகவும் அவரை நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. இவர் பல்வேறு மருத்துவ கருத்தரங்குகளில் பங்கேற்று தமது அனுபவங்களை மற்ற மருத்துவர்களுடன் பகிர்ந்துகொள்வதில் சிறந்தவர் என்றும் கூறப்படுகிறது.
பன்னாட்டு ரோபார்ட்டிக் மையத்தில் முன்னணி அறுவை சிகிச்சை வல்லுநர்களும், ஊழியர்களும், அனைத்து நவீன மருத்துவ உபகரணங்களுடன் உள்ளதோடு தலைச் சிறந்த தொழில் நுட்பத்தையும் உள்ளடக்கியுள்ளது. இதனால் அமெரிக்காவில் ரோபார்ட் உதவியுடனான பெருஞ்சுரப்பி அறுவை சிகிச்சை பலவற்றை வெற்றிகரமாக இந்த மருத்துவமனை மேற்கொண்டுள்ளது.
அமெரிக்காவிலும், சர்வதேச அளவிலும் மருத்துவர் விபுல் பட்டேலுக்கு உள்ள புகழைப் பயன்படுத்தி உள்ளூர், அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் உள்ள இந்நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க இந்த மருத்துவமனை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் மருத்துவர் விபுல் பட்டேல் கடந்த மாதம் இந்த மையத்தின் இயக்குனராக பொறுப்பேற்றதைத் தொடர்ந்து முடிவு செய்யப்பட்டதாகும். உலகில் இதுப்போன்ற ரோபார்டடிக் பெருஞ்சுரப்பி அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவ நிபுணர்கள் 2 பேரில் ஒருவர் இந்த விபுல் பட்டேல்.
இங்கிலாந்தில் வளர்ந்த விபுல் பட்டேல் அமெரிக்காவின் ஹூஸ்டன் மாகாணத்தில் உள்ள பேயிலர்ஸ் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்றுள்ளார். அதனைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை, சிநுநீரகவியல் துறையில் பயிற்சியினை மியாமி பல்கலைக் கழகத்துக்கு உட்பட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முடித்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள டியுக் பல்கலைக் கழகம், கார்னெல் பல்கலைக் கழகம், மெமோரியல் சோலன் கேட்டரிங் புற்றுநோய் மையம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ மையங்களில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு இந்த அறுவை சிகிச்சை தொடர்பாக பாடம் நடத்தியுள்ளார். இந்த அறுவை சிகிச்சையில் தனக்கு உள்ள அனுபவங்களை ஜெர்மனி, இத்தாலி, கிரீஸ், துருக்கி ஆகிய நாடுகளில் உள்ள இத்துறை வல்லுநர்களுடன் பகிர்ந்து கொள்வதுடன், மலேஷியா, இந்தியா போன்ற நாடுகளில் ரோபாட்டிக் அறுவை சிகிச்சை மேற்கொள்ள அனைத்து உதவிகளையும் வழங்கி வருகின்றார்.
பெருஞ்சுரப்பி புற்றுநோய் அறுவை சிகிச்சைத் தவிர, மலட்டுத்தன்மை, விந்து வெளியேற்றம் கட்டுப்பாடற்ற தன்மை ஆகியவற்றுக்கும் சிகிச்சையளிக்க இந்த அறுவை சிகிச்சை முறை உதவுகிறது.கடந்த ஆண்டு வரை ஒகையோ மாநில பல்கலைக் கழக மருத்துவ மையத்தில் பணியாற்றிய மருத்துவல் விபூல்பட்டேல் லேப்ராஸ்கோஃப்பிக் மற்றும் ரோபாட்டிக் அறுவை சிகிச்சைத் தொடர்பாக இரண்டு புத்தகங்கள் எழுதியுள்ளார்.
|