இந்தியாவில் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 லட்சமாக உயர்ந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால் வரும் 2015 ஆம் ஆண்டு புற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் ஆண், பெண்களின் எண்ணிக்கை 6,66,563 பேராக இருப்பார்கள் என்றும் அது எச்சரித்துள்ளது.
இந்த ஆண்டு புற்று நோய் தினம் புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாத இளைஞர்களை உருவாக்கும் இலக்கை கொண்டுள்ளது. இதற்கு காரணம் இளமைப் பருவத்தில் தான் பெரும்பாலும் இந்த பழக்கத்திற்கு ஆளாகின்றனர். இந்தப் பழக்கம் எவ்வளவு ஆபத்தானது என்பது தெரியாமல் இளைஞர்கள் இதற்கு அடிமையாகி வருவதைத் தடுக்கும் நோக்கத்துடன் இந்த ஆண்டுக்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மட்டும் நாள்தோறும் 5,500 இளைஞர்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமைப்பட்டு வருகின்றனர். இது நாட்டின் நலனுக்கு மட்டும் அல்ல சமுதாயத்தின் நலன்களுக்கும் மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது.
தற்போது புகையிலை பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்து வருவதாகவும், இதேநிலை தொடருமானால் வரும் 2025 ஆம் ஆண்டு பிற நோய்களால் மரணம் அடைபவர்களைக் காட்டிலும் புகையிலையால் மரணமடைபவர்களின் எண்ணிக்கை 220 மடங்கு அதிகமாக இருக்கும் என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. பீடி, சிகரெட் தொடர்ந்து பிடித்து வரும் பழக்கம் உள்ளவர்கள், புகைப் பிடிக்காதவர்களைக் காட்டிலும் 12 மடங்கு அதிக ஆபத்துக்கு உள்ளானவர்களாக இருப்பார்கள் என்றும் அது தெரிவித்துள்ளது.
புற்று நோய், பிற நோய்களைத் தடுக்க புகைப் பிடிக்கும் பழக்கம் இல்லாத இளைஞர் சமுதாயத்தை உருவாக்க வேண்டும், அதைவிட முக்கியமானது குழந்தைகளைப் பாதுகாப்பது. ஏனென்றால் அவர்களால் இதன் விளைவுகளில் இருந்து தங்களைப் பாதுகாத்து கொள்ள தெரியாது என்று மருத்துவர் பி.சி. குப்தா தெரிவித்துள்ளார். புகைப் பிடிப்பதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்தால் தான் நாம் எதிர் நோக்கும் உரிய பலனைப் பெற இயலும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
|