மூளை நரம்புகளில் இரத்தஒட்டம் தடைப்பட்டு பல்வேறு விதமான திடிர் (ஸ்ட்ரோக்) வியாதிகளுக்கு காரணமான புதிய மரபணு ஒன்றை ஜெர்மனி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த நோய் பெரும்பாலும் இளம், நடுத்தர வயது பெண்களை அதிகம் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. இந்த புதிய மரபணுக்கு XII C46T என விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். இந்த புதிய வகை மரபணு மூளை நரம்புகளில் இரத்தம் உறைந்து அதனால் கை, கால்கள் உள்ளிட்ட உடலின் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உடலில் 16.7 விழுக்காடும், இந்நோய் பாதிக்கப்படாதவர்களுக்கு நடத்திய சோதனையில் 5.5 விழுக்காடு அளவும் இருப்பது தெரிய வந்துள்ளது.
சாதாரண மனிதர்களைக் காட்டிலும் இந்த XII C46T மரபணு, இரத்த உறைதல் நோயால் பாதிக்கப் பட்டவர்களிடம் அதிகம் காணப்படுகிறது. இந்த ஆய்வை ஜெர்மனியில் உள்ள ஹெடில்பெஃர்க் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மருத்துவர் கிறிஸ்டோஃப் லிச்சி தலைமையில் மேற்கொண்டனர்.
இரத்தம் உறைதலுக்கு ஏற்ற காரணிகளான வயது, பாலினம், புகைப்பிடித்தல், கருத்தடைச் சாதனங்கள் ஆகியவற்றை பயன்படுத்துவோர் நீங்கலாக ஏனைய நோயாளிகளிடம் உள்ள இந்த XII C46T மரபணுவின் அளவில் மாற்றம் இல்லை என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது என்று கிறிஸ்டோஃப் லிச்சி கூறியுள்ளார்.
தங்களுடைய கண்டுபிடிப்பை உறுதிப்படுத்த வேண்டியுள்ளது என்று தெரிவித்த கிறிஸ்டோஃப் லிச்சி மூளை நரம்புகளில் இரத்த போக்கு தடைப்பட்டு கட்டிகள் உருவாகும் நோயாளிகளுக்கு இந்த வகை மரபணு உள்ளதா என்பதை சோதித்து பார்ப்பதுடன், எதிர்காலத்தில் அது போன்ற அடைப்பு ஏற்படாமல் தடுக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்க இந்த ஆராய்ச்சி உதவும் என்று தெரிவித்துள்ளார். இது தவிர வேறு சில மரபணுக்களும் இந்நோய்க்கு காரணமாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
|