தமிழ்நாட்டைச் சேர்ந்த சுகுணா கோழிப் பண்ணை நிறுவனம் இருதய நோய் தடுக்கும் முட்டை, வைட்டமின் சத்துக்கள் நிறைந்த முட்டையை அறிமுகப்படுத்துகிறது.
கோவையை சேர்ந்த சுகுணா பவுல்ட்ரி பார்ம் சுகுணா ஹார்ட், சுகுணா ஆக்டிவ் என்ற இரண்டு புதிய ரக கோழி முட்டைகளை அறிமுகப்படுத்தி உள்ளது.
இது குறித்து இந்நிறுவனத்தின் வர்த்தக பொது மேலாளர் மருத்துவர் ரவீந்திரன் கூறுகையில், சுகுணா ஹார்ட் கோழி முட்டை இருதய நோய் வராமல் தடுக்கவும், அதிக பதற்றம், இரண்டாம் வகை நீரழிவு நோய் மற்றும் ஒவ்வாமை நோய் வராமல் தடுக்கும் ஆற்றல் உடையது. இதில் மற்ற முட்டையை விட 24 விழுக்காடு கொழுப்பு சத்து குறைவாக இருப்பதுடன், இருதய நோயை தடுக்கும் வைட்டமின்- இ, ஒமேகா ஆசிட் ஆகியவை உள்ளன.
சுகுணா ஆக்டிவ் ரக முட்டையில் வைட்டமின்-இ, டோகாடாஹெக்சோனிக் ஆசிட் அதிகளவு உள்ளது. இது நோய் தடுப்புக்கு முக்கியமான ஆசிட்டாகும். இந்த ஆசிட் தாய்ப்பாலில் இருக்கும். இது புற்று நோய், எய்ட்ஸ், ஹைபோதேரிடிசம் ஆகிய வியாதிகள் வராமல் காக்கும் தன்மை உடையது.
சுகுணா ஆக்டிவ் ரக முட்டை குழந்தைகள், பெரியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைக்கு பால் கொடுக்கும் பெண்கள் ஆகியோரும் உணவாக உட்கொள்ளலாம். எங்கள் கோழிப் பண்ணை மாதத்திற்கு ஏழு முதல் பத்து இலட்சம் முட்டைகளை உற்பத்தி செய்யும் திறன் உடையது. நாங்கள் விரைவில் பெங்களூருரில் தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க போகிறோம். இது ஆசியாவின் மிகப் பெரிய தீவன உற்பத்தி தொழிற்சாலையாக இருக்கும்.
இப்போது அறிமுகப்படுத்தியுள்ள சுகுணா ஹார்ட், சுகுணா ஆக்டிவ் ஆகிய இரண்டு ரக முட்டைகளும் சென்னை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்களில் சூப்பர் மார்க்கெட்டுகளிலும், மளிகை கடைகளிலும் கிடைக்கும் என்று தெரிவித்தார்.
|