நமது உடலைக் ஸ்கேன் செய்யும் போது 80 விழுக்காடு கதிர்வீச்சு பாதிப்பை குறைத்து பாதுகாப்புடன் உடலுறுப்புகளை தெளிவாக முப்பரிமாண வடிவில் படம் பிடித்துக் காட்டும் நவீன ஸ்கேனர் ஒன்றை உலகின் முன்னணி தொழில் நிறுவனமான பிலிப்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இதன் விலை 10 லட்சம் பவுண்டுகள் (ரூ.7.6 கோடி).
இந்த புதிய ரக சி.டி. ஸ்கேனர் உடலின் வெவ்வேறு பகுதிகளையும் முப்பரிணாமத்தில் தெளிவாக படம் பிடித்துக் காட்டும் திறன் படைத்தது. சிகாகோ நகரில் நடைப்பெற்ற வட அமெரிக்க ரேடியாலாஜிக்கல் நிபுணர்கள் சங்க கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இதன் சிறப்பு அம்சங்கள் குறித்து விளக்கி கூறப்பட்டது. இதயம், நுரயீரல் உள்ளிட்ட பகுதிகளில் உருவாகும் மிகச் சிறிய புற்றுநோய்க் கட்டிகளைக் கூட கண்டறிய இது பெரிதும் உதவும்.
உடல் முழுவதையும் இந்த ஸ்கேன் ஒரு நிமிடத்திற்குள் ஸ்கேன் செய்யும் திறன் கொண்டது. அதனுடன் 5 மில்லி செகண்டில் உடலில் எக்ஸ்ரே கதிர்வீச்சை செலுத்தும் நேரத்தில் இது உடலின் பாகங்களை துல்லியமாக படம்பிடித்துவிடுகிறது என்று பிலிப்ஸ் நிறுவன அதிகாரி தெரிவித்தார்.
ஸ்கேன் செய்த சில நிமிடங்களிலேயே நோயாளி எழுந்து நேரடியாக மருத்துவரிடம் சோதனைக்காகச் செல்லலாம். மருத்துவரும் நோயாளியின் ஸ்கேன் செய்யப்பட்ட உடலின் பகுதிகளை உடனே காணமுடியம் என்று பிலிப்ஸ் நிறுவனத்தின் துணைத்தலைவர் ஜிம் பியூல்டன் கூறினார்.
நோயாளியின் ஸ்கேன் செய்யப்பட்ட உடல் பகுதிகளை தாம் விரும்பும் எந்த கோணத்திலும் மருத்துவரால் பார்க்க முடியும். அதேப் போன்று சுற்றியும் பார்க்க இயலும் என்பது இதன் சிறப்பு அம்சமாகும். சாதாரண சி.டி. ஸ்கேனரைப் போன்றே செயல்படும் இந்த ஸ்கேனர் வேகமாக செயல்படுவதால் உடலின் அதிக இடங்களைப் படம் பிடிக்கிறது. அதேபோன்று தெளிவான அதிக படங்களையும் தருகிறது என்று கூறினார்.
இதயத்தை இரண்டே நாடித்துடிப்புக்குள் முழுவதுமாக படம் பிடிக்கும் நவீன சக்தி வாய்ந்த ஸ்கேனர் இது என்றும், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தியிருப்பதால் கதிர்வீச்சில் இருந்து 80 விழுக்காடு பாதுகாப்புக்கு உறுதி செய்யப் பட்டுள்ளது என்று பிலிப்ஸ் மருத்துவ நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் ஸ்டிவ் ரஸ்கோவெஸ்கி கூறினார்.
தற்போது இந்த ஸ்கேனர் அமெரிக்காவின் ஒஹையோ மாகாணத்தில் கிளீவ்லேண்ட் நகரில் உள்ள மெட்ரோ மருத்துவ சுகாதார மையத்தில் மட்டுமே உள்ளது.
நுரையீரலில் உள்ள மிகச்சிறிய துகள்களைக் கூட இதன் உதவியால் தெளிவாக பார்க்க முடியும், அதனால் உடனடியாக நம்மால் தேவையில்லாதவற்றை உடனடியாக கண்டறிந்து சிகிச்சை அளிக்க இயலும் என்று இங்கிலாந்து நுரையீரல் பவுண்டேஷன் தலைவர் மருத்துவர் கெயித் புஃரோஷி கூறினார்.
புற்றுநோயைப் பொறுத்த மட்டில் உடலில் அது எந்த அளவுக்கு பரவியுள்ளது எள்பதை தெளிவாக தெரிந்துக் கொள்வதற்கும், வேறு ஏதாவது புதிய கோளாறுகள் உருவாகியுள்ளனவா என்பதைக் கண்டறியவும் இது பெரிதும் உதவும் என்றும் அவர் கூறினார்.
|