நமது நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 92,000 பேர் புதிதாக வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர் என்ற அதிர்ச்சிகரமான தகவலை மருத்துவ வல்லுநர் ஜக்ரா ஹூசைனி தெரிவித்துள்ளார்.
மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் பணிபுரியும் புற்றுநோய் சிகிச்சை வல்லுநரான ஜக்ரா ஹூசைனி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், ''நமது நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 92,000 பேர் வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். அதில் 80 விழுக்காட்டினர் 3 அல்லது 4 ஆவது நிலைகளைத் தாண்டியுள்ளனர்.
புதிதாக புற்று நோய் தாக்கியவர்களில் அதிகபட்சமாக 5 ஆண்டுகள்தான் உயிருடன் இருப்பார்கள் என்று கருதப்படுபவர்கள் 30 விழுக்காட்டினர் ஆவர். இதன்படி பார்த்தால் ஒவ்வொரு 7 நிமிடத்திற்கும் ஒருவர் வாய்ப் புற்றுநோயினால் இறக்கிறார்.
மற்றவர்களைவிட புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு 7 மடங்கு அதிகமாகும். தீவிரமாக புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு 17 விழுக்காடு அதிகமாகும்.
பான் பராக், குத்கா, புகையிலை ஆகியவற்றை மெல்பவர்களுக்கு புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு 68 விழுக்காடு அதிகமாகும். புகை பிடித்தல், புகையிலை மெல்லுதல், மதுப்பழக்கம் உள்ளவர்களுக்கு 100 விழுக்காடு அதிகமாகும்'' என்றார்.
மேலும், '' புற்றுநோய் மேற்கத்திய நாடுகளில் இருந்து வந்ததாகவே கருதப்படுகிறது. எனவே இது உலகளாவிய சிக்கல் என்று கூறுவதற்கு ஆதாரம் இல்லை.
உலகளவில் ஆண்டுதோரும் 3,50,000 முதல் 4,00,000 வரையிலான மக்கள் வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இதில் சிகிச்சைக்குப் பிறகு 5 ஆண்டுகள் வரை உயிர் வாழ்பவர்கள் 50 விழுக்காட்டினர் மட்டுமே.
இந்த நோய் இந்தியா போன்ற வளரும் நாடுகளை அதிகமாக பாதிக்கிறது. ஏனெனில் இங்குள்ள மக்கள் நோயின் முதல் நிலையிலேயே மருத்துவர்களை நாடுவதில்லை.
புகையிலைப் பழக்கம் உள்ளவர்களும், மதுப் பழக்கம் உள்ளவர்களும் மாதத்திற்கு ஒருமுறை மருத்துவர்களிடம் சென்று பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
வாயில் வெள்ளைப் புள்ளிகள், புண்கள், சதை வளர்ச்சி ஏதாவது உள்ளதா என்று தினமும் பார்க்க வேண்டும்'' என்றும் மருத்துவர் ஹூசைனி தெரிவித்தார்.
|