நாள்தோறும் அறுவை சிகிச்சைப் பிரிவில் புரட்சிகளை ஏற்படுத்தி வருகிறது மருத்துவ உலகம். இந்த வரிசையில் சமீபமாக பிரான்ஸ் நாட்டு மருத்துவர்கள் பெண் பாலுறுப்பு வழியாக பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளனர்.
வலியற்ற, தழும்புகளற்ற அறுவை சிகிச்சைகளை நோயாளிகள் உலகம் முழுதும் விரும்பத்துவங்கியுள்ளனர். அறுவை சிகிச்சையின் போதும் அதற்கு பிறகும் வலி ஏற்படாத புதிய முறை அறுவை சிகிச்சைகள் தற்போது பிரபலமடைந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இயற்கை புழைவாய் வழி ஊடுருவி உடல் உள்ளுறுப்புகளில் அறுவை சிகிச்சைகளை நிகழ்த்தும் நேச்சுரல் ஆரிஃபைஸ் ட்ரான்ஸ்லூமினல் என்டோஸ்கோபிக் சர்ஜரி என்ற அறுவை சிகிச்சை முறை வலிக்கும் அறுவை சிகிச்சைக்குமான தொடர்பை முறியடித்துவிட்டது.
இந்த முறையை பயன்படுத்தி 30 வயதான பிரான்ஸ் பெண்மணி ஒருவருக்கு மருத்துவர்கள் பித்தப்பையை அகற்றியுள்ளனர். அதாவது இந்த பெண்மணியின் பாலுறுப்பு வழியாக அறுவை சிகிச்சைக்கான மிகச்சிறிய கருவிகளை உட்செலுத்தி பித்தப்பையை அகற்றியுள்ளனர்.
இந்த அறுவை சிகிச்சை சுமார் 3 மணி நேரங்கள் நடைபெற்றுள்ளது. இதில் ரத்தக் கசிவோ, கல்லீரல் திரவங்களின் கசிவோ ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதில் இன்னொரு முக்கிய விஷயமென்னவெனில் லேப்ரோஸ்கோப் உதவியில்லாமலேயே இந்த அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது என்பதே.
அறுவை சிகிச்சை முடிந்த மறுநாளே இந்த பெண்மணி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். அறுவை சிகிச்சைக்கு பின் ஏற்படும் வலி அறவே இல்லை. இதனால் பெருமளவு ஆண்ட்டிபயாடிக் எடுத்துக் கொள்வது தவிர்க்கப்பட்டுள்ளது. 10 நாட்களில் அந்த பெண்மணி தனது அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடத் துவங்கியுள்ளார். அறுவை சிகிச்சை மேற்கொண்ட உறுப்பில் எந்த வித பிரச்சனைகளும் ஏற்படவில்லை.
இதன் மூலம் தழும்பற்ற, வலியற்ற, சதையை அறுக்கத் தேவையில்லாத, மயக்க மருந்து உதவி தேவைப்படாத ஒரு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
|