செல்பேசியில் தொடர்ந்து 10 நிமிட நேரம் பேசும்போது ஏற்படும் வெப்பம், மூளையில் எற்படுத்தும் சில வேதியியல் மாற்றங்களின் காரணமாக புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்!
இஸ்ரேலின் வீஸ்மான் விஞ்ஞானக் கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், செல்பேசியில் இருந்து உருவாகும் மிகக் குறைந்த அளவிலான கதிர்வீச்சு மூளையில் இயற்கையாக ஏற்படும் திசுப் பிளவை தடுக்கின்றது என்றும், அதன் காரணமாக டியூமர் என்றழைக்கப்படும் கேன்சர் நோய் உருவாதற்கு அடிப்படையான கட்டி அல்லது வீக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது தெரியவந்துள்ளது.
செல்பேசியை பயன்படுத்துவதே அபாயகரமானது என்பதற்கான ஆதாரம் ஏதும் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், இந்த ஆய்வு அப்படி ஒரு அபாய மணியை ஒலித்துள்ளது.
மூளையில் புற்றுநோய் உள்ளவர்களுக்கு செல்பேசியின் பாதிப்புதான் காரணமாக என்பது குறித்து ஆய்வு நடந்துள்ளது. ஆனால், மூளையில் ஏற்படும் கட்டிக்கு செல்பேசி பயன்படுத்தியதுதான் காரணம் என்று உறுதியாக கண்டுபிடிக்கப்படவில்லை.
செல்பேசி அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து அதுவொரு பாதுகாப்பான கருவிதான் என்று கூறப்பட்டு வந்தது. ஏனெனில், அதில் இருந்து வெளியாகும் மிகக் குறைந்த அளவிலான கதிர்வீச்சினால் உருவாகும் வெப்பம் மூளையை பாதிக்கக்கூடிய அளவிற்கு ஆபத்தானது அல்ல என்று கூறப்பட்டது.
ஆனால், அவ்வாறு உருவாகும் வெப்பமற்ற (Non-Thermal) கதிர்வீச்சு கூட மூளைக்கு அபாயமாகலாம் என்று இஸ்ரேல் ஆய்வு கூறியுள்ளது.
செல்பேசியில் இருந்து உருவாகும் அதே அளவிற்கான கதிர்வீச்சை (875 மெகாஹெட்ஸ்) மனித மற்றும் எலியின் திசுக்களில் செலுத்திப் பார்த்தனர். அந்தக் கதிர்வீச்சு மிக வலிமையற்றதாக இருந்தும் கூட 10 நிமிட நேரத்தில் அதன் காணரமாக ஒரு வேதியியல் மாற்றம் திசுக்களில் ஏற்பட்டது. அந்த வேதிப்பொருள் திசுக்களை பிளவுபடுத்துவதில் தொடர்புடையதாகும்.
இதிலிருந்து, செல்பேசி வெளியேற்றும் வெப்பமற்ற கதிர்வீச்சும் மூளைத் திசுக்களை பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பாகும் என்று ஆய்வு செய்த விஞ்ஞானி டாக்டர் ரோனி சீகர் கூறியுள்ளதாக தி நியூ சயிண்டிஸ்ட் மேகஸின் எனும் விஞ்ஞான இதழ் தெரிவித்துள்ளது.
|