சொறி அல்லது சிரங்கு என்பது ஒரு வகைப் சிலந்திபேன் பூச்சியினால் (சர்கோப்டஸ் ஸ்காபீ) ஏற்படும் பாதிப்பாகும். இப்பூச்சிகள் எட்டுகால்கள் கொண்ட சிறிய ஒட்டுண்ணியாகும். இவை தோலினை துளைத்துக் கொண்டு செல்கின்றன. தோலின் அடிப்பகுதியில் தங்கி அதன் தன்மையை மாற்றுவதால் கடுமையான சொறி ஏற்படுகிறது. இவைகள் இரவு நேரங்களில் அதிகமாக வேலை செய்வதால், சொறி, சிரங்கு பாதித்தவர்கள் இரவு நேரங்களில் அதிகமாக பாதிக்கப்படுவதை நாம் கண் கூடாக பார்த்திருக்கிறோம்.
சொறி சிரங்கை ஏற்படுத்தும் பூச்சிகளை கண்களினால் காண முடியாது. ஆனால் உருவத்தை பெரிதாக்கி காண்பிக்கும் கண்ணாடி மற்றும் மைக்ராஸ்கோப்பைக் கொண்டு காணலாம்.
சொறியை எற்படுத்தும் சிலந்தி பேன்கள் அதிக உணர்வுள்ளவைகள். இவை தான் ஒட்டியுள்ள உயிரினத்தின் உடலில் 24 முதல் 36 மணிநேரங்கள் மாத்திரமே பெரும்பாலும் உயிர்வாழும். இவ்வகை பூச்சிகள் ஒருவரோடு ஒருவர் நெருங்கிய தொடர்பு கொண்டால் உதாரணமாக கை குலுக்குதல், கட்டி அணைத்தல் போன்றவை செய்யும் போது மற்றவர்களுக்குப் பரவுகிறது. இவ்வகை பூச்சிகள் நாய்/பூனை போன்ற விலங்குகளிலிருந்து மிக அரிதாக பரவுகிறது.
முட்டி (முழங்கால்), தொடை இடுக்குகள், முழங்கையின் பின்புறம், கை மணிக்கட்டு, கைகளின் விரலிடுக்கம் போன்ற பகுதிகளில் வீக்கம் மற்றும் கொப்புளங்களை ஸ்காபீஸ் எனப்படும் ஒட்டுண்ணி ஏற்படுத்துகிறது. சொறி அல்லது அரிப்பு ஏற்படுதல் ஸ்காபீஸ்-ன் மிக முக்கிய அடையாளமாகும். நாட்கள் செல்லச்செல்ல அரிப்பு மிக மோசமாகும்.
இந்த ஒட்டுண்ணிகள் பெரும்பாலும் நாம் வெகு நாளாக பயன்படுத்தும் பொருட்களில் இருந்து பரவுகிறது. குறிப்பாக படுக்கை மெத்தைகளில் இவை அதிகளவில் வாழ்கின்றன. எனவே படுக்கை மெத்தையை சுடுதண்ணீரினால் நன்கு கழுவி படுக்கையில் உள்ள சிலந்தி பேன்களை அகற்ற வேண்டும். இவ்வாறு செய்வதால் ஓரளவிற்கு இதுபோன்ற ஒட்டுண்ணிகளில் இருந்து காத்துக் கொள்ளலாம்.
அப்படியே சருமத்தில் ஒட்டுண்ணிகள் ஒட்டிக் கொண்டு பாதிப்பை ஏற்படுத்திவிட்டாலும், உடனடியாக உரிய மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற வேண்டியது அவசியமாகிறது.