மருத்துவ வசதியின்றி 20 லட்சம் குழந்தைகள் பலியாகின்றன
திங்கள், 5 அக்டோபர் 2009( 12:11 IST )
இந்திய பொருளாதாரமும், மருத்துவ வசதிகளும் வேகமாக வளர்ந்து வரும் அதே வேளையில், போதுமான மருத்துவ வசதியின்மையால் இந்தியாவில் ஆண்டுதோறும் 5 வயதுக்குட்பட்ட 20 லட்சம் குழந்தைகள் உயிரிழப்பதாக சர்வதேச தொண்டு நிறுவனம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
லண்டனைச் சேர்ந்த சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனம் குழந்தைகளை பாதுகாப்போம் என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில், உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 5 வயதுக்குட்பட்ட 90 லட்சம் குழந்தைகள் உயிரிழக்கின்றன. இதில் அதிகபட்சமாக இந்தியாவில் மட்டும் 20 லட்சம் குழந்தைகள் பலியாகின்றன. ஊட்டச்சத்து குறைபாடு, வயிற்றுப்போக்கு, சளி காய்ச்சல் ஆகியவை உயிரிழப்புக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன.
இந்தியாவைப் பொறுத்தவரையில், பிறந்த இரண்டு மாதத்துக்குள் 10 லட்சம் குழந்தைகளும், இரண்டு ஆண்டுகளில் 4 லட்சம் குழந்தைகளும் பலியாகிவிடுகின்றன. மற்ற 6 லட்சம் குழந்தைகள் 5 வயதுக்குள் இறந்து விடுகின்றன.
தலைநகரான டெல்லியிலேயே 20 சதவீதம் பேர் குடிசைப்பகுதிகளில் வசிப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. அங்கு கடந்த ஓராண்டில் குழந்தைகள் உயிரிழப்பு இருமடங்காக ஆகி உள்ளது. 120 கோடி மக்கள் வசிக்கும் நமது நாட்டில் ஏழை எளிய மக்களுக்கு போதிய மருத்துவ வசதிகள் இன்னமும் கிடைக்கவில்லை. இதனாலேயே குழந்தைகள் உயிரிழப்பு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது என்கிறது அந்த அறிக்கை.
தெருவிற்கு ஒரு பள்ளிக் கூடமும், தெருவிற்கு ஒரு மருத்துவமனை அல்லது மருத்துவர்கள் இருக்கும் நமது நாட்டில், இப்படி 20 லட்சம் குழந்தைகள் பலியாவதற்கு காரணம் என்ன?
பணம்...
இந்த பணம்தான் எல்லாவற்றிற்கும் அடிப்படையாகிறது. பண வசதி படைத்தவர்கள் நாடு விட்டு நாடு வந்து சிகிச்சை பெறும்போது, நமது நாட்டிலேயே வாழ்பவர்களுக்கு ஏன் அந்த சிகிச்சை மறுக்கப்படுகிறது.
ஒவ்வொரு தனியார் மருத்துவமனையிலும், இலவச சிகிச்சை நிச்சயமாக அளிக்கப்பட வேண்டும் என்று ஒரு சட்டமேக் கொண்டு வரப்பட வேண்டும். இலவசமாக என்றால் எப்படி சம்பாதிப்பது என்று மருத்துவமனை நிர்வாகம் கேள்வி கேட்கலாம். மருத்துவம் என்பது ஒரு சேவை. அதனை சம்பாத்தியத்திற்காக மட்டுமே பயன்படுத்துவது எந்த வகையிலும் நியாயமில்லை. ஒவ்வொரு மருத்துவமனையிலும் ஒரு குறிப்பிட்ட அளவிற்காவது ஏழைகளுக்கு குறைந்த கட்டணத்திலோ அல்லது இலவசமாகவோ சிகிச்சை அளிக்க வேண்டும்.
மேலும், மருத்துவத்திற்கு அரசை மட்டுமே நம்பியிராமல், அரசு உதவி பெறும் மருத்துவமனைகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்.
டெல்லியில் அதிநவீன வசதிகளுடன் கூடிய பல மருத்துவமனைகள் இருந்தபோதிலும், அங்குள்ள மேம்பாலங்களின் கீழ் எத்தனை பெண்களது பிரசவங்கள் நிகழ்கின்றன. மருத்துவ சோதனை, அறுவை சிகிச்சை என பணக்காரர்களிடம் இருந்து கொள்ளை அடிக்கும் கோடிகளில் இருந்து கொஞ்சம் சில்லறைகளையாவது ஏழைகளுக்கு மருத்துவமனை நிர்வாகம் செலவிடத் தயாராக வேண்டும். அதற்கு அரசு புதிய உத்தரவுகளைக் கொண்டு வர வேண்டியது அவசியம்.
எந்த இடத்தில் அதிகமாக பணம் குவிகிறதோ, அங்கிருந்து நிச்சயமாக ஒரு குறிப்பிட்ட அளவு பணம் ஏழைகளுக்காக செலவிடப்பட வேண்டும் என்று ஒரு சட்டம் வர வேண்டும். அது கோயிலாக இருந்தாலும் சரி, மருத்துவமனையாக இருந்தாலும் சரி, சினிமா தியேட்டராக இருந்தாலும் சரி, வரி கட்டுவதைத் தவிர்க்காவவது இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட பணக்கார முதலைகள் முன்வர வேண்டும்.