வீட்டு கட்டுமானப் பணியின்போது மாடியில் இருந்து கீழே விழுந்ததால் மூளைச்சாவு ஏற்பட்ட அரியலூர் கூலித்தொழிலாளியின் உடல் உறுப்புகளை தானமாக அளிக்க அவனது தாய் முன்வந்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் வாலாஜாநகரம் ராஜீவ்நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம் - எலிசபெத் தம்பதிகளின் மகன் புயல்வெங்கடேசன். அரியலூர் அரசு மருத்துவமனையில் ஊழியராக வேலை பார்த்து வந்த ஆறுமுகம் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில் புயல்வெங்கடேசன்தான் கூலித் தொழில் செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்.
கடந்த 9-ந் தேதி தொண்டபாடி கிராமத்தில் உள்ள ஒருவரது வீட்டிற்கு வெள்ளை அடிப்பதற்காக வெங்கடேசன் சென்றார். அங்கு 2-வது மாடியின் வெளிச்சுவரில் கயிற்றின் உதவியுடன் வெள்ளை அடித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென கயிறு அறுந்ததால் வெங்கடேசன் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல், அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.
இதனால் வெங்கடேசன் உயிர்பிழைக்க முடியாதது உறுதியானது. இதை அறிந்த அவனது தாய், மற்ற உறுப்புகள் பிறருக்கு பயன்பெறும் வகையில் உடல் தானம் செய்ய முன்வந்தார். தங்களது ஆசையை தஞ்சை மருத்துவர்களிடம் தெரிவித்தனர்.
அவர்களும் உடனடியாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையை தொடர்பு கொண்டு, உடல் தானம் செய்ய முன்வந்த தகவலை தெரிவித்தனர். சென்னை மருத்துவர்கள் வெங்கடேசனின் நிலைமையை கேட்டறிந்தவுடன் தஞ்சைக்கு நாங்கள் வருவதோடு, நீங்கள் வெங்கடேசனின் உடலோடு திருச்சிக்கு வந்துவிடுமாறு அறிவுறுத்தினர்.
அதன்படி நேற்றுமாலை வெங்கடேசனின் உடலை ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றி, திருச்சியில் உள்ள ஏ.பி.சி. மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு இன்று காலை அப்பல்லோ மருத்துவர் குழுவினர், வெங்கடேசனின் உடலை பிரேத பரிசோதனை செய்து, சிறுநீரகங்கள், கண், இருதய வால்வு போன்றவற்றை பல்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்று, அங்குள்ள நோயாளிகளுக்கு பொருத்துகின்றனர்.
தனது மகன் உயிரிழந்தாலும், அவனது உறுப்புகளை தானம் அளித்து பல உயிர்களுக்கு வாழ்வளித்த அந்த தாயின் நல்லெண்ணத்திற்கு நமது தமிழ்.வெப்துனியா சார்பில் நன்றிகளை கூறிக் கொள்வோம்.
|