குழந்தைகளுக்கு இயற்கை அளிக்கும் கொடை தாய்ப்பால் என்றால் மிகையில்லை. தாய்ப்பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கவல்லது.
ஒரு பெண் சுகப் பிரசவத்தில் குழந்தை பெற்றிருந்தால், குழந்தை பிறந்த அரைமணி நேரத்திற்குள் தாய்ப்பால் தர வேண்டும். சிசேரியனாக இருந்தால் நான்கு மணி நேரத்திற்குப் பிறகு, குழந்தைக்கு தாய்ப்பால் தரலாம்.
குழந்தை பிறந்தவுடனேயே உடல் ரீதியாக பால் அருந்த தயாராகி விடுகிறது. குழந்தை தூங்கிவிட்டால் அதனை பால் அருந்தச் செய்வது கடினம்.
தாய்ப்பாலுக்கு முன்பு வேறு பொருட்களைத் தரலாமா?
தாய்ப்பால் தரத் துவங்கும் முன் கண்டிப்பாக தேன், சர்க்கரைத் தண்ணீர் போன்ற எதையும் தரக் கூடாது. இவை குழந்தைகளுக்கு நல்லதல்ல.
எத்தனை நாட்களுக்கு தாய்ப்பால் மட்டுமே தரவேண்டும்?
குழந்தைக்கு ஆறு மாதங்கள் ஆகும் வரை, இரவும் பகலும் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். தாயிடம் போதிய அளவு பால் இருக்குமானால், வேறு பாலையோ, தண்ணீரையோ தரத் தேவையில்லை.
கொலஸ்டிரம் என்றால் என்ன?
பிரசவத்திற்கு பிறகு தாய்க்கு முதலில் சுரக்கும் பாலுக்கு கொலஸ்டிரம் என்று பெயர். இது சுமார் 10 முதல் 40 மி.லி. அளவு இருக்கும். இந்தப்பால் 2 முதல் 4 நாட்களுக்கு சுரக்கும். இதில் புரதச்சத்தும், இம்யுனோ குளோபின்ஸ் எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் ஊட்டச்சத்தும் அதிக அளவில் உள்ளது.
குழந்தைகளுக்கு எந்த அளவு இடைவெளியில் தாய்ப்பால் தரலாம்?
குழந்தைக்கு தேவைப்படும் போதெல்லாம். குழந்தை அழும்போதெல்லாம் பால் தர வேண்டும். இது குழந்தைக்கு குழந்தை வேறுபடும். சிலருக்கு அரைமணி நேரத்திற்கு ஒரு முறையும், சிலருக்கு இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறையும் தர வேண்டியிருக்கும்.
|