சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்பது பழமொழி. அதாவது நமது உடல் ஆரோக்கியமாக இருந்தால் நம் எந்த பணியையும் செய்ய முடியும்.
தூக்கம் என்பது உடலுக்கு மிக இன்றியமையாதது. உடலுக்கும், மனதிற்கும் முழுமையான ஓய்வை அளிக்கும் உன்னதமான ஒரு விஷயம்தான் தூக்கம்.
தினமும் 3 வேளை உண்ணும் உணவும், குறைந்தபட்சம் 6 மணி நேர தூக்கமும் மனிதனுக்குத் தேவைப்படுகிறது.
இரவில் அதிகமாக தூங்குபவர்களை விட குறைந்த நேரமே தூங்குபவர்களுக்குத்தான் உடல் பருமன் பிரச்சினை ஏற்படுவதாக சமீபத்தில் கனடா நாட்டு பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் நடத்திய ஆய்வு கூறுகிறது.
குறைவாக சாப்பிடுவதும் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதும், நேரம் தவறி சாப்பிடுவதும் உடலுக்கு கேட்டை உண்டாக்கும். ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உணவுகளை உண்ணும் பழக்கத்தை கொண்டு வர வேண்டும். ஏனோ தனோ என்று உண்ணாமல் உடலுக்கு ஏற்ற உணவுகளை மட்டும் அளவோடு உண்பதும் நல்லது.
சரி ஏன் நேரத்திற்கு தூங்க வேண்டும், அது என்ன 6 மணி நேரம் தூக்கம், ஏன் அதிகாலையில் எழுந்திரிக்க வேண்டும், நேரம் தவறாமல் ஏன் சாப்பிட வேண்டும் என்று விதண்டாவாதமாக கேள்வி எழுப்புபவர்களுக்கு கீழ்க்கண்ட விளக்கத்தை தந்துதான் ஆக வேண்டும்.
நமது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளும் ஒரு சில மணி நேரத்தில்தான் தங்களது பணிகளைச் செய்கின்றன. அந்த நேரத்தில் அதற்கேற்ற வகையில் நமது உடல் ஓய்வாக இருக்க வேண்டியது அவசியம்.
இரவு 9 மணி முதல் 11 மணி வரை : இந்த நேரம் நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்திகள் வேலை செய்யும் நேரம். அதாவது நமது உடலில் உள்ள தேவையற்ற, அதிகப்படியான ரசாயனங்களை வெளியேற்றும் பணியைச் செய்யும். எனவே இந்த சமயத்தில் நாம் படுக்கைக்கு படுக்கச் சென்று விட வேண்டும். இல்லையெனில் அமைதியாக அமர்ந்து பாடல் கேட்பதும் நல்லது.
இந்த நேரத்தில் ஓய்வெடுக்காமல் வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து விடுகிறது.
|